வெனிசுவேலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் கட்டடங்கள் சரிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று சுமார் 32 மணிநேரத்தின் பின் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் பின்னர் பதிவான மிக அரிதான மற்றும் வியக்கத்தக்க உயிர் பிழைப்புச் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் நீண்ட நேரம் சிக்கியிருந்த போதிலும், குறித்த குழந்தைக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை மீட்கப்பட்டு சுமார் 90 நிமிடங்களின் பின்னர், அதே இடத்திலிருந்து குழந்தையினுடைய தாயாரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட குழந்தை தனது தந்தையுடன் இணைந்த உணர்ச்சிகரமான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறான துயரமான சூழலில், இந்த மீட்புச் சம்பவம் நம்பிக்கையூட்டும் ஒரு தருணமாக அமைந்துள்ளது.
வெனிசுவேலாவில் கடந்த 24 ஆம் திகதி அந்த நாட்டு நேரப்படி மாலை சுமார் 6:04 அளவில் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.
வெறும் 39 வினாடி இடைவெளியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களில், முதலாவது 7.2 மெக்னிடியூட் ஆகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின் அதிர்வு 7.5 மெக்னிடியூட் ஆகவும் பதிவாகியுள்ளன.
கடந்த நூற்றாண்டில் வெனிசுவேலாவைத் தாக்கிய மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிகழ்வினால், தலைநகர் கராகஸ் மற்றும் லா குயிரா ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, இந்த நிலநடுக்கங்களால் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது; மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பாதிப்பு குறித்த தரவுகள் மாற்றமடையக்கூடும்.
0 comments:
Post a Comment