Tuesday, June 30, 2026

15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பா? அதிரடி முடிவுக்குத் தயாராகும் இந்திய அணி!

 இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரில், 15 வயதான அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அறிமுகம் மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட பலவீனங்கள் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.


சூர்யவன்ஷியை அணியில் சேர்ப்பதற்கான கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அவர் மற்ற வீரர்களைப் போல தகுந்த செயல்முறைகளைப் பின்பற்றி தனது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என உதவி பயிற்சியாளர் ரையன் டென் டோஸ்கேட் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த 15 வயது இளம் வீரர் சர்வதேச சவால்களுக்குத் தயாராகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என முழுமையாக இழந்த அதிர்ச்சியில் இருக்கும் இந்திய அணி நிர்வாகம், கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் அயர்லாந்து தொடரில் சொதப்பிய சஞ்சு சம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு, சூர்யவன்ஷியை அபிஷேக் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அயர்லாந்து தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் திணறினர்.

அத்துடன் IPL போன்ற தட்டையான ஆடுகளங்களில் ஆடுவதை விடுத்து, இங்கிலாந்தின் சவாலான சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஜொஃப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங், சகிப் மஹ்மூத் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்களையும், ஆதில் ரஷித் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களையும் இங்கிலாந்து கொண்டுள்ளது.

ஹரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், பில் சால்ட், வில் ஜேக்ஸ் போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.

புதிய T20 அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வந்து, இங்கிலாந்தின் சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய லெத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை

 

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷ்யாமிளா பெரேராவை, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம அனுமதித்துள்ளார்.


அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணையில் சென்றதன் பின்னர், வழக்கின் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது என நீதவான் சந்தேகநபருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கருத்துகளையும், சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ முன்வைத்த வாதங்களையும் பரிசீலித்த பின்னரே நீதவான் சந்தேகநபருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பயணம் நிறைவு!

 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்று (30) நாடு திரும்புகின்றனர்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க முடிந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பெபஜியோர்கியு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான வலிமையை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை நிலைத்தன்மையை உறுதிப்படுத்த நாணயக் கொள்கையானது மிகுந்த விழிப்புடனும், தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் இருக்க வேண்டும் என நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்த சீர்திருத்த வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்த நிபுணர்கள் குழுவினர், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் 'விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்' கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தனர்.

வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

 

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 146.53 புள்ளிகளால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் (0.65%) அதிகரிப்பைப் பதிவு செய்து, இன்று 22,263.28 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.


அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.75 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதி மரணம்: உடலில் போதைப்பொருள் இருந்தமை உறுதி

 

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி டி.டி. சமரவீர உடனடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.


ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த 2025 நவம்பர் 22ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

காலி, வித்யாலோக பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த 28 ஆம் திகதி காலை திடீர் சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும், அவரது சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் அதில் போதைப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகளை மேலதிக பகுப்பாய்விற்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்திய மரண விசாரணை அதிகாரி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

காலி காவல்துறையின் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை சார்ஜன்ட் சரத் இது தொடர்பான சாட்சியங்களை வழிநடத்தினார்.

ஹப்புத்தளையில் குளவி தாக்குதல் – தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

 

ஹப்புத்தளை கல்கந்த தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் உடனடியாக ஹப்புத்தளை பங்கட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.


சிகிச்சைக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனையோர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி உயிரிழப்பு

 

ஹம்பாந்தோட்டை - அங்குனகொலப்பெலஸ்ஸ சிறைச்சாலையில் ஹெரோயின் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (29) உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 65 வயதான கைதி என தெரிவிக்கப்படுகிறது.

ஹெரோயின் கடத்தல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், சிறைச்சாலையில் வைக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அங்குனகொலப்பெலஸ்ஸ மருத்துவமனையில் நேற்று (29) அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்தார்.

உடலத்தின் மீதான பிரேத பரிசோதனை இன்று (30) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்கவுக்கு பிணை

 

தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரைத் அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) அனுமதித்தது.


மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், காவல்துறையால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

iPhone 18 Pro தொடர்பான மிகப்பெரிய தகவல் கசிவு!

 

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே, தற்போது iPhone 18 Pro மொபைல் குறித்த ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன.

இணையத்தளங்களில் வெளியான தகவல்களின்படி, iPhone 18 Pro மொடல் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் Drop Test (கீழே விழும் நிலைத்தன்மை சோதனை) தொடர்பான காணொளி மற்றும் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

இந்த தகவல் கசிவின் மூலம், புதிய iPhone மொடலின் வடிவமைப்பு, கேமரா அமைப்பு மற்றும் வெளிப்புற கட்டமைப்பு குறித்து சில முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளதாக தொழில்நுட்ப தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த தகவல்கள் குறித்து அப்பிள் நிறுவனம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


எனவே, இணையத்தில் பரவி வரும் இந்த தகவல்கள் மற்றும் கசிந்த படங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை என்பதால், அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அம்பாறை வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு – ஸ்னைப்பர் துப்பாக்கியும் சிக்கியது

 

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு – பக்மிட்டியா வனப்பகுதியில், புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த ஆயுதங்கள் மரப்பொந்து ஒன்றின் உள்ளே நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் நீண்டகாலமாக அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

 

கடுவலை, சுதர்ஷன மாவத்தையில் உள்ள குடிநீர் விநியோக நிறுவனம் என்ற போர்வையில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றினை, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது, சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 18,575 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் மொத்த கொள்ளளவு 3,345.5 லீற்றர்களாகும்.

இவற்றுடன், வெளிநாட்டு மதுபானம் என பெயரிடப்பட்ட நான்கு, ஒரு லீற்றர் போத்தல்களும், 750 மில்லி போத்தலும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சோதனையின் போது, மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட எத்தனோல் அடங்கிய போத்தல், மதுபானம் தயாரிப்பதற்கான உபகரணங்கள், 50 கிராம் 200 மில்லி கிராம் கேரளா கஞ்சா என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிகிந்தலை, மருதானை, வத்தளை, வெபடை தெற்கு, கெதாலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி

 

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 341.30 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (26) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 341.87 ஆக காணப்பட்டது.


வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மொரோக்கோ வரலாற்று வெற்றி!

 

கால்பந்து தொடரின் 'ரவுண்ட் ஒஃப் 32' சுற்றில், நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி மொரோக்கோ அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து அடுத்த சுற்றுக்கு (Last 16) முன்னேறியுள்ளது.

ஆட்டத்தின் 120 நிமிட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என சமநிலையில் இருந்தன.

நெதர்லாந்து வீரர் கோடி காக்போ (Koti Kakpo) கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொரோக்கோவின் இஸ்ஸா டியோப் (Issa Diop) கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில், மொரோக்கோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மொரோக்கோ அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி (Ismail Saibari) வெற்றியைக் தீர்மானிக்கும் இறுதி பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மொரோக்கோவை வெற்றி பெறச் செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் மொரோக்கோ அடுத்த சுற்றில் கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது.

நெதர்லாந்து அணி இந்தத் தோல்வியுடன், 2026 கால்பந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்

 

இந்த ஆண்டு இதுவரை தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும் தென்னை அறுவடை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சாந்த ரணதுங்க, கூறினார்.

மட்டக்களப்பு புதுப்பாலத்திற்கு பெய்லி பாலம் - வியாழக்கிழமை நடவடிக்கைகள் ஆரம்பம்

 

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

அதன்படி, தற்காலிக பாலம் அமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்காலிக பாலம் அமைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 40 வருடங்கள் பழமையான மட்டக்களப்பு புதுப்பாலத்தில் ஏற்பட்டிருந்த வெடிப்புகள் தொடர்பில் ஏற்கனவே அறிக்கையிடப்பட்டிருநததாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி மாலை குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த பகுதியில் நிரந்தர பாலம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக இடப்படவுள்ள பெய்லி பாலம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இடிந்து வீழ்ந்துள்ள மட்டக்களப்பு புது பாலமானது, மட்டக்களப்பு நகருக்கு பிரவேசிப்பதற்கான பிரதான பாலங்களில் ஒன்றாக உள்ளது.

மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, பாடசாலைகள் உட்பட பல்வேறு கேந்திர முக்கியத்துவமான உள்ளக போக்குவரத்திற்குரிய பிரதான வழியாக குறித்த பாலம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் 85,712 இடங்களில் டெங்கு சோதனை : 7,188 இடங்களில் நுளம்பு பெருகும் அபாயம்...


 நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அவற்றில் 7,188 இடங்கள் நுளம்பு பெருக்க கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகம் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் மாத்திரம் 986 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டு 53,159 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், டெங்கு நோயினால் இதுவரையில் 31 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி வருமான வரி அதிகாரி ஒருவர் கைது

 

வருமான வரித் திணைக்கள அதிகாரி எனப் போலியாக நடித்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

கொழும்பு கொம்பனித் தெரு காவல் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகளால் சந்தேகநபர் கல்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கல்கமுவவைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வருமான வரித் திணைக்கள அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வருமான வரி செலுத்தும் பல்வேறு நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.

பின்னர், தனது தனிப்பட்ட தேவைக்காக பணம் கோரி, அந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுமாறு மிரட்டியும், ஏமாற்றியும் பெற்றுள்ளார்.

விசாரணைகளின்போது, அவர் ஏற்கனவே இது போன்ற நிதி மோசடிச் சம்பவங்களுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெனிசுவேலா நில அதிர்வு - உயிரிழப்பு 1,700 ஆக உயர்வு

 

வெனிசுவேலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700ஐக் கடந்துள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், இந்த இயற்கை பேரிடரில் 5,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் சிக்கல்கள் நீடிப்பதாகக் கூறப்படுகின்றது.

காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதல்: சிறுமி உட்பட 8 பேர் பலி

 

காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் அவசர சேவையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அல்-அக்ஸா மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி (Drone) மூலம் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன் கான் யூனிஸ் பகுதியில் கூடாரம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.

மேலும் அல்-மாவாசி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 23 வயது இளம்பெண் மற்றும் அவரது ஒரு வயது மகள் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் காராமா நகரின் வடமேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 31 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Monday, June 29, 2026

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்: கிரிக்கெட் தகுதிச் சுற்று அளவுகோல்களை வெளியிட்டது ஐசிசி!

 

2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டின் தகுதிச் சுற்றுகள் மற்றும் அணிகளைத் தேர்வு செய்வதற்கான அளவுகோல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இன்று (29) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.



ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் ஆறு அணிகளில் நான்கு இடங்கள் கண்டங்கள் வாரியான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதற்காக 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு 20 தரவரிசை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அதன்படி, அந்தந்த கண்டங்களில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தகுதியுள்ள நான்கு அணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, ஆசியாவில் உயர்மட்ட தரவரிசையில் இருக்கும் அணி நேரடித் தகுதியைப் பெறும்.

பெண்கள் பிரிவுக்கான தகுதி

பெண்கள் பிரிவில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் வெவ்வேறு கண்டங்களிலிருந்து தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் முதல் நான்கு அணிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

இதில் அவுஸ்திரேலியா (ஓஷானியா), தென் ஆபிரிக்கா (ஆபிரிக்கா) மற்றும் இங்கிலாந்து (ஐரோப்பா) ஆகியவை தகுதிக்கு நெருக்கமாக உள்ளன. 



பிரித்தானியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதால், அந்த நாட்டுக்காக இங்கிலாந்து மட்டுமே ஒதுக்கீட்டுப் பட்டியலில் கருதப்படும்.

மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் அமெரிக்கா

மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், அது பல கரீபியன் நாடுகளின் கூட்டு அமைப்பாக இருப்பதால், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) அங்கீகாரம் பெற்ற தனித்துவமான தேசிய ஒலிம்பிக் குழுவாக (NOC) கருதப்படாது.

எனவே, அந்த அணியால் நேரடியாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது.



அதேபோல், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஐசிசி தரவரிசையில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட இடத்தைப் பிடித்திருப்பதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா ஒரு இடத்தைப் பெறும்.


இறுதி தகுதிச் சுற்று

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஆறாவது இடத்தைத் தீர்மானிக்க, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் 'இறுதி ஒலிம்பிக் உலகளாவிய தகுதிச் சுற்று' தனித்தனியாக நடத்தப்படும்.

இதில் ஐசிசி தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெறாத அடுத்த எட்டு உயர்மட்ட அணிகள் மோதும்.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி இடம்பெற்றால், அந்தப் பிராந்தியத்தில் எந்தத் நாடு ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பதைத் தீர்மானிக்க பிரத்யேகமாக 'மேற்கிந்திய தீவுகள் பிராந்திய தகுதிகாண் சுற்று' ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்யும்.

துப்பாக்கியை தவறவிட்ட காவல்துறை அதிகாரிக்கு விளக்கமறியல்!

 

யட்டியந்தோட்டை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, தனது கடமைநேர துப்பாக்கியை தவறவிட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை மீண்டும் ஒப்படைக்கத் தவறியமைக்காக, சீதாவாக்கபுர வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த 27 ஆம் திகதி குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவாக்கபுர வலய குற்ற விசாரணைப்பிரிவும், சீதாவாக்க சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் விசேட நடவடிக்கைப் பிரிவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் துப்பாக்கிச் சூடு: ஐவர் உயிரிழப்பு

 

ஜேர்மனியின் வடக்கே உள்ள ஸ்டேட் (Stade) நகரில் அமைந்துள்ள இளைஞர் மன்றம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சந்தேகநபர் என்றும் காவல்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



உயிரிழந்தவர்களின் வயது அல்லது தாக்குதலுக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், தற்போது பொதுமக்களுக்கு மேலதிக அச்சுறுத்தல் ஏதுமில்லை என காவல்துறை உறுதியளித்துள்ளது.

சம்பவ இடத்துக்கு பெருமளவிலான அவசரகாலப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

 

ரிதீமாலியத்த, லொக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் வள்ளமொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



கண்டியிலிருந்து சென்ற 33 பேர் கொண்ட குழுவினர், நேற்று (28) காலை லொக்கல் ஓயா நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள தனியார் சுற்றுலா தளம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர், அந்த குழுவினர் நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தின் நடுவே உள்ள இடமொன்றுக்கு செல்வதற்கு, இரண்டு சிறிய வள்ளங்களை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட ஒழுங்கற்ற வள்ளமொன்றை ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து கரைக்கு திரும்பும் போது, இந்த வள்ளம் திடீரென கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.



விபத்து நடந்த சமயம், மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் அதில் பயணம் செய்துள்ளனர். இதில், உயிரிழந்த இருவர் உயிர் காக்கும் அங்கிகளை அணியவில்லை எனவும், அவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

காவல்துறை மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், இருவரும் உடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.