Monday, June 1, 2026

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 வருடங்கள் நிறைவு

 

தமிழர்களின் வரலாற்று சாட்சியங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் 45 வருடங்கள் நிறைவடைகின்றன.

1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில், ஆசியாவின் மிகப் புகழ்பெற்ற நூலகங்களில் ஒன்றாக விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

சுமார் 97 ஆயிரத்திற்கும் அதிகமான அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், வரலாற்றுச் சான்றுகள், பழமையான கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட தமிழர் அறிவுப் பாரம்பரியத்தின் பெறுமதிமிக்க பொக்கிஷங்கள் அந்தத் தீயில் சாம்பலாகின.

அந்த இரவு எரிந்தது ஒரு கட்டிடம் மட்டுமல்ல, ஒரு இனத்தின் அறிவுச் செல்வமும், பண்பாட்டு நினைவுகளும், வரலாற்று அடையாளங்களும் ஆகும் எனப் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

45 ஆண்டுகள் கடந்த போதிலும், அந்தத் துயரச் சம்பவத்தின் நினைவுகள் இன்னும் தமிழர் மனங்களில் அழியாத வடுக்களாகத் தொடர்கின்றன.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள், கருத்தரங்குகள் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் மூலம் அந்த வரலாற்று இழப்பை நினைவுகூருகின்றனர்.

அறிவை அழிக்க முடியும் ஆனால் அறிவுக்கான தாகத்தையும் ஒரு மக்களின் நினைவுகளையும் அழிக்க முடியாது என்பதற்கு யாழ்ப்பாணம் பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக எழுந்து நிற்பது சாட்சியாக உள்ளது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், அறிவு, பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உலகம் நினைவுகூர்கிறது.

எபோலா வைரஸ் அபாயத்தை எதிர்கொள்ள இலங்கை தயார் – பொதுச் சுகாதார நிபுணர் துஷானி தாபரேரா உறுதி!

 

எபோலா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்பக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாகப் பொதுச் சுகாதார விசேட மருத்தவ நிபுணர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகச் சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு இணங்க, சுகாதார அமைச்சு இதற்கான தயார்நிலைத் திட்டங்களையும் பயிற்சிகளையும் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எபோலா வைரஸ் பரவல் பதிவாகியுள்ள கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் குறித்து சிறப்புப் புலனாய்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவு மூலமாக வானூர்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக நாட்டுக்குள் நுழையும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனடியாகத் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எபோலா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நோயாளர்களை அனுமதித்து, அவர்களுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்கும், பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (ஐ.டி.எச். - அங்கொடை) முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் துஷானி தாபரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: மதபோதகர் உட்பட இரு இளைஞர்கள் விளக்கமறியலில்

 

அம்பாறை - இறக்காமம் பகுதியில், 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு இளைஞர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மதபோதகர் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த மதபோதகர் சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த நிலையில், தமது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போதே, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவருக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் 21 வயதான இறக்காமம் பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இறக்காமம் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த கதி

 

மீகொடை, ஹைலெவல் வீதியில் தானசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறவினர்கள் அடங்குவதாகத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில், பி.பி.இந்திராணி (56 வயது) – பிலியந்தலை, வேவல, பள்ளி வீதியைச் சேர்ந்தவர்.

நவிஷா நிலக்ஷி (35 வயது) – இந்திராணியின் மகள்.

லசிக பிரியங்கர நாணயக்கார (38 வயது) – இந்திராணியின் மருமகன் (மகளின் கணவர்).

15 வயது சிறுமி – உயிரிழந்த இந்திராணியின் சகோதரரின் மகள் (உறவினர் முறை தங்கை).

அவிசாவளைப் பகுதியில் வசித்து வந்த நவிஷா மற்றும் அவரது கணவர் லசிக ஆகியோர், கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள தங்களது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

நேற்று அவர்களை மீண்டும் அவிசாவளையில் உள்ள வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் கொண்டு போய் விடுவதற்காக இந்திராணியும் அவரது கணவரும் புறப்பட்டுள்ளனர்.

அவிசாவளை நோக்கிச் செல்லும் வழியில் வீதியோரத்தில் காணப்பட்ட 'ரொட்டித் தானசாலை' ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக அவர்கள் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு வரிசையில் நின்றுள்ளனர்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டி வந்த இந்திராணியின் கணவர் (நவிஷாவின் தந்தை) மற்றும் நவிஷாவின் மூத்த பிள்ளை ஆகிய இருவரும் முச்சக்கரவண்டிக்குள்ளேயே அமர்ந்திருந்ததால் அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும், உயிரிழந்த நவிஷா, அவரது கணவர் லசிக, தாய் இந்திராணி மற்றும் உறவினர் முறை தங்கை ஆகியோருடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே இந்த கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இலங்கை ரூபாயின் இன்றைய பெறுமதி

 


இலங்கையில் ​​இன்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 70 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 392 ரூபாய் 41 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபாய் 68 சதம், விற்பனைப் பெறுமதி 431 ரூபாய் 76 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 58 சதம், விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 30 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 243 ரூபாய் 42 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 253 ரூபாய் 50 சதம், விற்பனைப் பெறுமதி 264 ரூபாய் 43 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 3 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 11 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்க விலை வீழ்ச்சி – வெள்ளி விலை அதிகரிப்பு

 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் இன்று (01) திருத்தங்கள் பதிவாகியுள்ளன.

சர்வதேச சந்தை நகர்வுகளுக்கு அமைய, இன்று தங்கம் ஒரு அவுண்ஸின் விலை 4,477.51 டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பின்னணியில், இந்த சர்வதேச விலை வீழ்ச்சியின் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது.

தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ள போதிலும், வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை இன்றையதினம் 74.95 டொலராக அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் ஆகியவையே உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்களுக்கு முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ பேருந்துகளுக்கு புதிய ஜிபிஎஸ் கண்காணிப்பு அம்சம் அறிமுகம்

 

பயணிகள் தற்போது LMT GO மொபைல் செயலி மூலம் மெட்ரோ பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடங்களையும் வருகை நேரங்களையும் கண்காணிக்க முடியும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இந்த புதிய வசதியின் தொடக்க விழாவில் பேசிய குணசேன, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய இந்தச் சேவை, பேருந்துகள் தங்கள் நிறுத்தங்களுக்கு எப்போது வரும் என்பதைச் சரிபார்க்கவும், இயக்கப்படும் பேருந்து மற்றும் கட்டண விவரங்களைக் காணவும், வரவிருக்கும் இடங்களுக்கான உத்தேச பயண நேரங்களைக் கண்காணிக்கவும் பயணிகளுக்கு உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், பயணிகளுக்கு மிகவும் திட்டமிடப்பட்ட, வசதியான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இந்த புதிய சேவையைப் பயன்படுத்திக்கொள்ள, பயணிகள் LMT GO செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்த தங்கவிலை

 

இலங்கையில் தங்க விலை இன்று (01) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த 29 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 387,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் ,இன்று 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் , 1000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

QR குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

 

எரிபொருள் வழங்குவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் (QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில் இறுக்கமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உணவு ஒவ்வாமையினால் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி


 நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த 8 பேரும் முட்டை அடங்கிய சோறு பொதியினை உட்கொண்டதாகவும் இவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களுக்கு தற்போது உடல்நிலை சற்று தேறிவருவதாகவும் ஆபத்தான எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளின் விலையை குறைக்க தேசிய அளவில் கோரிக்கை

 

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமைகள் மற்றும் விலையேற்றம் காரணமாக, பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் தங்களுக்குரிய மாதவிடாய் கால சுகாதார துவாய்களை (Sanitary Pads) கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவர்களின் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் மக்களின் வருமான மட்டத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையிலேயே இத்தகைய தயாரிப்புகளின் விலை மிக அதிகமாகக் காணப்படுவதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குறித்த அமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ ,

நாணய மதிப்பு இறக்கங்கள், வரிகள், உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் சுகாதார தயாரிப்புகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.

இதற்கு முன்னர் சுமார் 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு பக்கெட் மாதவிடாய் கால சுகாதார துவாய் , தற்போது 260 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதுடன், சில இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தக முத்திரை (Branded) தயாரிப்புகளின் விலைகள் இதைவிடவும் அதிகமாக உள்ளன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய சுமையாகும்.

இதன் காரணமாக, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் சுகாதார துவாய்களை கொள்வனவு செய்ய முடியாத சில கிராமப்புற பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள், தங்களின் மாதவிடாய் காலங்களில் வேலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

இது ஒரு நுகர்வோர் பிரச்சினை மட்டுமல்ல, பரந்த சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாகும்.

எனவே, மாதவிடாய் கால சுகாதார செலவுகள் மற்றும் இது தொடர்பான கொள்கை ரீதியான குறைபாடுகள் குறித்து தேசிய அளவில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என மருத்துவர் சமல் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சானது யுனிசெப் (UNICEF) போன்ற அமைப்புகளுடனும் கல்வித்துறையுடனும் இணைந்து மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும், பெண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான இந்த தயாரிப்புகள் மீதான வரிவிதிப்புக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குப் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை எனத் தகவலறிந்த சுகாதாரத் துறை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

மீகொட சம்பவம் - விபத்தை ஏற்படுத்திய சிற்றூந்தின் சாரதி கைது

 

கொழும்பு - மீகொட பகுதியில் விசாகப் பூரணையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வாடகை சிற்றூந்து மோதியதில்  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதன்போது, காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.
 
அவிசாவெல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த வாடகை சிற்றூந்து ஒன்று, மீகொட சந்திப்பில் உள்ள தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்போது, வரிசையிலிருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில், 42 வயதான  சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

அத்துடன், விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்ட எரிபொருள் விலை

 

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பிரதான எரிபொருட்களின் விலைகளும் நடப்பு ஆண்டில் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் இலங்கையின் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, மே 31 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 5ஆவது முறையாகவும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் மண்ணெண்ணெய் விலையானது 56.6 வீதத்தினால் (103 ரூபாய்) அதிகரித்து, அதிக சதவீத விலை உயர்வைப்பதிவு செய்துள்ளது.

அத்துடன் ஒக்டேன் 92 பெட்ரோல் 48.6 வீதத்தினாலும், சுப்பர் டீசல் 48 வீதத்தினாலும், ஒட்டோ டீசல் 46.9 வீதத்தினாலும் உயர்வடைந்துள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையும், மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 'ஹோர்முஸ் நீரிணையின்' (Strait of Hormuz) பாதுகாப்பு குறித்த அச்சமுமே உலகளவில் எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீகொட பகுதியில் சோகம்

 

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் சிற்றூந்து ஒன்று, அன்னதான வரிசையில் நின்றவர்களின் மேல் மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இலங்கை யுவதி உயிரிழப்பு - 6 பேர் கைது

 

தமிழ்நாடு, சென்னையில் இலங்கை யுவதி ஒருவரை வாகனத்தால் மோதி, மரணம் அடைய செய்தமை தொடர்பில், ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை - கோயம்பேட்டில் சிற்றூந்து ஒன்று, குறித்த யுவதி பயணித்த உந்துருளியை மோதிய போது, இந்த மரணம் சம்பவித்ததாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு முகாமில் வசித்த 18 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த யுவதி இன்ஸ்டகிராம் ஊடாக பழகிய சென்னையிலுள்ள தனது நண்பியை சந்திக்கச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவத்தை எதிர் நோக்கியுள்ளார்.

சென்னையிலுள்ள இரவு நேரக் களியாட்ட விடுதிக்கு சென்ற குறித்த யுவதியுடன், அங்கிருந்த இரண்டு குழுக்கள் முரண்பட்டுள்ளனர்.

அதன்பின்னர், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர், யுவதியை பின்தொடர்ந்து, அவர் பயணித்த வாகனத்தை மோதியுள்ளனர்.

இதன்போது அந்த யுவதி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு

 

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஹ்மதாபாத்தில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பில் வொஷிங்டன் சுந்தர் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் சார்பில் ரசிக் சலாம் தார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தநிலையில் 156 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி 75 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2ஆவது முறையாக கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.