Monday, June 15, 2026

மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு: சி.ஐ.டி விபரம் சமர்ப்பிப்பு


முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ராசிக் மொஹமட் ஃபைஸ் மற்றும் ஹமீத் லெப்பே மொஹட் ஆகியோரே இந்த புலனாய்வு விசாரணையில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தொடர் படுகொலைகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள அறிக்கையின்படி, வெவ்வேறு இடங்களில் டி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பல கொடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முருகன் கோவிலை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வவுணதீவு காவல்துறை அதிகார எல்லைக்குட்பட்ட கொத்தியாபொல பகுதியில் வசித்துவந்த அழகதுரை தர்மலிங்கம் என்பவர், அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்பாடு

 

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகில் உள்ள வீதியில் யூக்கலிப்டஸ் மரங்கள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அந்த வீதியூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் நிலவும் குறித்த பகுதியை ஆய்வு செய்த பின்னர், பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த போக்குவரத்து மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த பகுதியில் உள்ள மரங்களின் வேர்கள் வெளியில் தெரிவதாகவும், இதனால் மரங்கள் வீதிக்கு மேலே சரிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அபாயகரமான நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீதியூடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகள் தங்களின் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

 

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 34 சதம்.

விற்பனை பெறுமதி 336 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 331.42 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 341.36 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

 

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விஜய், சங்கீதா ஆகியோர் முன்னிலையாகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் - சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் 19 இன் பின் அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை - பின்னிருக்கை ஆசனப் பட்டி கட்டாயம்!

 

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருதரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை எச்சரித்துள்ளது.

வாகனங்களின் பின்னிருக்கைகளுக்கான ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைவதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூன் 19ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயம்

 

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 'TIN' இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய சட்ட விதிகளின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், பல்வேறு முக்கிய பொதுப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல்,மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல்,புதிய வணிகங்களைப் பதிவு செய்தல்,நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்,கடன் அட்டைகளைப் (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல் ஆகிய தேவைகளுக்கு 'TIN' இலக்கத்தைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

இதேவேளை, கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், வரி செலுத்துவோர் அடையாள இலக்கங்கள் (TIN) இனிமேல் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்

 

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு, மரபணு மாற்றமடைந்த புதிய வகை டெங்கு வைரஸ் ஒன்றே காரணம் என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இந்த நோய் வேகமாகப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது, கடந்த காலங்களில் நாட்டில் பரவிய வைரஸ் வகைகளுடன் ஒப்பிடுகையில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் இதற்கு முன்னர் இலங்கை மக்களிடையே பரவலாகக் காணப்படவில்லை.

இலங்கையர்களில் பெரும்பாலானோருக்கு இந்த புதிய வகை வைரஸுக்கு (Variant) எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உடம்பில் இல்லை என்பதால், மிக அதிகளவிலான மக்கள் இந்தத் தடவை டெங்கு நோய்த்தாக்கத்திற்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்து (Vulnerable) காணப்படுகின்றது.

இதனால் நாடு முழுவதும் இந்நோய் மிக வேகமாகப் பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கக்கூடும் என்பதை எதிர்பார்த்து, அதற்கு தேவையான சுகாதார ஏற்பாடுகளை அமைச்சு ஏற்கனவே மேற்கொண்டிருந்தது.

இருப்பினும், இம்முறை பரவும் வைரஸ் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து, சுகாதார அறிவுறுத்தல்களைக் கடுமையான முறையில் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு

 

காஸா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் இரத்த வங்கிகளின் (Blood Banks) செயற்பாடுகள், கடுமையான மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக முடங்கும் பேரழிவு நிலையை எட்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு (World Blood Donor Day) காஸா சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஆய்வகங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பரிசோதனை மூலப்பொருட்களில் (Testing Materials) 87 வீதமானவை தற்சமயம் கையிருப்பில் இல்லை.

போதிய மருத்துவப் பரிசோதனை கருவிகள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் இல்லாததன் காரணமாக, நோயாளிகளுக்கான அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காஸா முனையில் உள்ள இரத்த வங்கிகளில் தற்சமயம் கடுமையான இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக மேலதிக இரத்தம் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அவசர கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sunday, June 14, 2026

கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!

 

கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப் பாதைகளின் (Priority Lanes) ஊடாக 4 பிரதான வீதிகளில் இந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன மெட்ரோ பேருந்து திட்டம் டிஜிட்டல் தகவல் அமைப்புகள், பயணிகள் இலகுவாகப் பேருந்தில் ஏறுவதற்கான பிரத்தியேக மேடைகள், மற்றும் ஸ்மார்ட் கார்ட் தொழில்நுட்பம் (Smart Card Technology போன்ற சில அதிநவீன வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

வரலாற்றுப் பாரம்பரியமிக்க கண்டி நகரின் தொன்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, பொதுமக்களுக்குத் திறனான, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்

 

உலகின் முன்னணி தொழிற்துறை நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சிமாநாடு நாளை (15) பிரான்சில் ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில், பிரான்சுக்குச் சொந்தமான ஜெனீவா ஏரிக்கு (Lake Geneva) அருகில் அமைந்துள்ள விடுதி வளாகமொன்றில் இந்தமாநாடு நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் இந்த உச்சிமாநாடு நாளை மறுதினம் (16) வரை தொடரவுள்ளதாக அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தமுறை நடைபெறவுள்ள ஜி-7 அரச தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகள், வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டின் போது உலகத் தலைவர்களால் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, நாளை (15) முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட தூய்மையாக்கல் வேலைத்திட்டம், ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 18ஆம் திகதி கல்வி நிறுவனங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் விசேட வேலைத்திட்டமும், ஜூன் 19ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் இறுதி நாளான ஜூன் 20ஆம் திகதியன்று, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலைத் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்திற்குப் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காலி முகத்திடலில் கின்னஸ் சாதனை: 5000 கலைஞர்களின் பரதநாட்டிய ‘சங்கமம் 2026’ பிரம்மாண்ட நிறைவு!

 

கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து 10,000 கால் சலங்கைகளின் ஒரே தாள ஒலியுடன் நிகழ்த்திய “சங்கமம் 2026” பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்வு இன்று (14.06.2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தியாவில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவரின் வழிகாட்டலின் கீழ் இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி(Global Academy) மற்றும் இலங்கைக்கான லியா ஹோலி டேஸ்(Leah Holly Days)ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

5000 நாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு ஆடிய இந்த நாட்டியாஞ்சலி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்தினால் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இந்த தருணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும்” எனத் தெரிவித்து கலைஞர்களைப் பாராட்டினார்.

தமிழ் கலாசார பெருமிதத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர்.

அத்துடன், இவ்வாறான பிரம்மாண்ட கலாசார நிகழ்வை இலங்கையில் நடத்துவதற்கு வழிவகுத்த பிரதி அமைச்சருக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தொழில் விவகார பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பல முக்கிய விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பு

 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பெறுபேறுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்தவார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், சிரேஷ்ட கல்வி அதிகாரிகளுக்கு,கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதங்கள் காணப்படின், முறையான முன் திட்டமிடல் மூலம் அல்லது தேவைப்படின் மேலதிக நேரத்தை ஒதுக்கியாவது பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கல்வி நாட்காட்டியின்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் பரீட்சைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகள் உரிய பாடத்திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் பாடசாலைக்கு வராமைக்கு கல்வி அமைச்சே பொறுப்பு - ஜோசப் ஸ்டாலின்

 

பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு கல்வி அமைச்சே பெரும் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தேவைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் பெற்றோருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதுடன், இது மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது குறைவதற்குக் காரணியாக அமைந்துள்ளது என்று ங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.


பல பெற்றோரால் பாடசாலைகள் கோரும் செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்றும், அதேநேரம் தனியார் மேலதிக வகுப்புக்களின் விரைவான பரவல் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டது. மாணவர்கள் ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்பதை கண்டறிந்து, அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண பாடசாலைகளும் கல்வி அமைச்சும் இணைந்து செயற்பட வேண்டும்," என அவர் கூறினார்.

கல்வி நிர்வாகத்தில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளும் தோல்விகளுமே நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

Saturday, June 13, 2026

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் காணொளி !

 

சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, "AI ரோபோக்களால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று பயந்தோம், ஆனால் அவை பிச்சை எடுக்கும் வேலையையும் விட்டுவைக்கவில்லை" என்று இணையவாசிகள் பலரும் நகைச்சுவையாகவும் கவலையுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வானூர்தி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

 

இந்திய வான்படைக்கு சொந்தமான AN-32 ரக வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் (Jorhat) வானூர்தி நிலையத்தில் குறித்த வானூர்தியை தரையிறக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓடுதளத்தில் தரை இறங்கிய சில வினாடிகளில் வானூர்தி தீப்பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது.

வானூர்தி விபத்துக்குள்ளானதில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு அதிகாரி காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பருத்தித்துறையில் காணாமல் போன சிறுவன் உடலமாக மீட்பு

 

பருத்தித்துறை - புலோலி தெற்கு பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 6 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் காணாமல்போனமை தொடர்பில் காவல்துறையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சிறுவன் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஆரம்பம்!

 

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நிலுவைத் தொகையுடனான இக்கொடுப்பனவை வழங்கும் பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பழங்குடியினரின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 

பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலா அத்தன் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அந்த மக்களின் பாரம்பரிய நிலப் பயன்பாடு தொடர்பாக நிலவும் சிரமங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பழங்குடி மக்கள் எவ்வித தடங்கலும் இன்றி தங்களது பாரம்பரிய நிலங்களை அனுபவிப்பதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு எனவும், அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது

 

ஐந்து வயதுடைய முன்பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை மாதம்பே காவல்துறையினர், சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.

கைது செய்யப்பட்டவர் மாதம்பே, கருகுவட்டவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பட்டனர்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வந்த வியாபார தளத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமியை வியாபார தளத்திற்குள் அழைத்துச் சென்று குறித்த வர்த்தகர் அத்துமீறியதாக சிறுமியின் தாயார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில், இன்று பிரசன்னப்படுத்தப்பட உள்ளதாக மாதம்பே காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.

களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!

 

முல்லேரியா - களனிமுல்லை பகுதியில் கொள்கலன் பாரவூர்தி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


கடந்த ஜூன் 08 ஆம் திகதி கொள்கலனுடன் கூடிய பாரவூர்தி ஒன்று காணாமல் போயுள்ளதாக முல்லேரியா காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

ஜல்தர பகுதியைச் சேர்ந்த அமல் அத்தநாயக்க என்பவருக்குச் சொந்தமான பாரவூர்தி ஒன்றே திருடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருடப்பட்ட பாரவூர்தி , வாகன தரிப்பிட வளாகத்திலிருந்து ரணால, அம்புல்கம பகுதி வரை செலுத்தப்பட்டு, அங்குள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாரவூர்தி மீட்கப்படும் போது, அதிலிருந்த மேலதிக சக்கரம் மற்றும் சில உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் அல்லது "ரணாலே சொப்பே" என அழைக்கப்படும் நபரே இந்தத் திருட்டைப் புரிந்துள்ளார் எனவும், இவர் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த வாகன தரிப்பிட வளாகத்தில் பணிபுரிந்தவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சந்தேகநபர் அந்த பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லேரியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக வரலாற்றில் முதல் ட்ரில்லியனரானார் ஈலோன் மஸ்க்

அமெரிக்காவின் 'ஸ்பேஸ் எக்ஸ்' விண்வெளி நிறுவனம் பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் உலகின் முதலாவது ட்ரில்லியனராக புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அண்மைய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக அறிமுகமாக (IPO) கருதப்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, நேற்று வர்த்தகத்தின் போது பாரியளவில் உயர்ந்ததே இதற்குக் காரணமாகும்.

புளூம்பெர்க் (Bloomberg) பணக்காரர்கள் பட்டியலின்படி, ஈலோன் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 1.11 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் உலகின் பெரும் பணக்காரர் என்ற தனது அந்தஸ்தை அவர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விண்வெளி, தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களில் தடம் பதித்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நாஸ்டாக் (Nasdaq) பங்குச்சந்தையில் 2.2 ட்ரில்லியன் டொலர் சந்தை மதிப்புடன் பட்டியலிடப்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு பங்கின் விலை 135 டொலராக நிர்ணயிக்கப்பட்ட போதிலும், வர்த்தகம் தொடங்கிய போது 150 டொலராக உயர்ந்தது.

முதலீட்டாளர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில், வர்த்தகத்தின் போது ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக 176.50 டொலர் வரை சென்று, இறுதியில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 161 டொலராக நிலைபெற்றது.

இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்கள் மற்றும் பொறுப்புறுதியாளர்களிடமிருந்து (Underwriters) 75 பில்லியன் டொலர்களைத் திரட்டியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் ஈலோன் மஸ்க்கிற்கு 42 சதவீத பங்குகள் உள்ளதால், நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் அவரிடமே உள்ளது. முதலீடு செய்யப்படும் நிதியை அவர் தனது விருப்பப்படி பயன்படுத்த முடியும்.

ஈலோன் மஸ்க்கின் இந்த அசாத்திய சொத்து மதிப்பானது, போலந்து அல்லது சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்திக்கு நிகரானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஸ்க் உலகின் முதல் ட்ரில்லியனராக உருவெடுத்துள்ளமை உலகளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, உலகளாவிய பொருளாதார ரீதியிலான சமத்துவமின்மை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதிவேகமாக உயர்ந்து வரும் இந்த சொத்து மதிப்பு, உலக அரசியலில் அவரை ஒரு செல்வாக்கு மிக்கவராகவும் அதேநேரம் விமர்சனத்திற்குரியவராகவும் மாற்றியுள்ளது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை மஸ்க் நிதியுதவியாக வழங்கியிருந்தார்.

அத்துடன், கடந்த ஆண்டில் சில மாதங்கள் அவர் அமெரிக்காவின் 'அரசாங்க செயல்திறன் துறைக்கு' (Doge) தலைமை தாங்கினார்.

அரச செலவினங்களைக் குறைக்கும் மஸ்க்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (USAID) மூடப்பட்டது.

இந்த நிதியொதுக்கீடு குறைப்பு நடவடிக்கைகளால், 2030 ஆம் ஆண்டளவில் உலகளவில் மேலும் 14 மில்லியனுக்கும் அதிகமான மரணங்கள் ஏற்படக்கூடும் என 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழின் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தவிர, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளின் தலைமைத்துவங்களையும், குடியேற்றம் மற்றும் இனப் பிரிவினைகளைத் தூண்டும் வகையிலான தலைப்புகளையும் ஈலோன் மஸ்க் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்

 

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டிலுள்ள சில மருத்துவமனைகள் தங்களது கொள்ளளவை மீறிய அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 5 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரச பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் இன்றும் தங்க விலை அதிகரிப்பு

 

இலங்கையில் நேற்று (12) இரண்டு தடவை தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்திருந்த நிலையில் இன்றும்(13) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாயாகவும்

அத்துடன் ,22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ரம்புக்கணையில் தொடருந்து தடம் புரண்டது!

 

ரம்புக்கணை தொடருந்து நிலையத்தில் தொடருந்து தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ரம்புக்கணையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த தொடருந்தே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த நிலைமை காரணமாக தொடருந்து சேவைகளில் தாமதம் எதுவும் ஏற்படாது எனவும், குறித்த தொடருந்து பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தடம் புரண்ட தொடருந்தை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கால்பந்து போட்டித் தொடர்: ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணி அமெரிக்கா சென்றடைந்தது !

 

கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் தேசிய அணி அமெரிக்காவை சென்றடைந்துள்ளது.

நீலம் மற்றும் சாம்பல் நிற ஆடைகளை அணிந்தவாறு ரொனால்டோ உள்ளிட்ட போர்த்துகல் வீரர்கள் அமெரிக்காவை சென்றடைந்துள்ளனர்.

இப்போட்டித் தொடரின் போது புளோரிடாவில் உள்ள பாம் பீச் கார்டன்ஸ் (Palm Beach Gardens) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் போர்த்துகல் அணி தங்கியிருக்கவுள்ளது.

அதன்படி, போர்த்துகல் அணி பங்கேற்கும் குழு நிலைப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

சாதாரண, உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்: கல்வி அமைச்சு அறிவிப்பு!

 

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள், முன்னதாக அறிவிக்கப்பட்ட கால அட்டவணையின்படி உரியத் தினங்களில் நடைபெறும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பாடசாலைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் காணப்படும் பாடசாலைகள், மேலதிக நேரத்தை ஒதுக்கி தேவையான திட்டமிடலுடன் செயற்பட்டுப் பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்படும் நிலையில் உள்ளது: ஈரான் வெளிவிவகார அமைச்சர்

 

போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார்.


இதன்கீழ், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டமாகவே முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்- அச்சுவேலி பகுதியில் தீ விபத்து!

 

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


அச்சுவேலி காவல்துறையின் அதிகாரி சூரியன் செய்திப்பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எனினும் தீப்பரவலினால் எந்தவிதமான ஆபத்துக்களும் நேரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் அதிகாரி சூரியன் செய்திப்பிரிவுக்கு இதனை குறிப்பிட்டார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா: விசேட போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

 

கொச்சிக்கடையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாயொட்டி, இன்று 13 ஆம் திகதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை புனித அந்தோனியார் சிலையை ஏந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மகா ஊர்வலம் நடைபெறவுள்ளதால், கொட்டாஞ்சேனை மற்றும் கடற்கரை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊர்வலம் நடைபெறும் வீதிகள் (2026.06.13)

மாலை 04.00 மணி ஊர்வலம்: கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகும் புனித அந்தோனியார் ஊர்வலம், கொட்டாஹேன வீதி, கல்பொத்த சுற்றுவட்டம், ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, ஹெட்டியாவத்த சந்தி, சேர் இராமநாதன் மாவத்தை மற்றும் புனித அந்தோனியார் மாவத்தை வழியாக புனித அந்தோனியார் தேவாலயத்தை அடையும். பின்னர் மாலை 5.00 மணிக்கு விசேட திருப்பலி நடைபெறும்.

மாலை 05.30 மணி மகா ஊர்வலம்: திருப்பலிக்குப் பின்னர் திருத்தலத்திலிருந்து ஆரம்பமாகும் மகா ஊர்வலம், புனித அந்தோனியார் மாவத்தை, ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டம், ஜிந்துப்பிட்டி வீதி, கதிரேசன் வீதி, ஆண்டிவேல் வீதி, பிராஸ் ஃபௌண்டர் வீதி, ஜிந்துப்பிட்டி வீதி, ஹின்னி அப்புஹாமி மாவத்தை, புதிய செட்டித்தெரு மற்றும் ஜம்பட்டா வீதி வழியாக மீண்டும் தேவாலயத்தை சென்றடையும்.

இதனால் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் தேவைக்கேற்ப பின்வரும் வீதிகளில் வாகன நுழைவு கட்டுப்படுத்தப்படலாம்.

ஹெட்டியாவத்த சந்தியிலிருந்து புனித அந்தோனியார் திருத்தலம் நோக்கி.

ஜிந்துப்பிட்டி சுற்றுவட்டத்திலிருந்து புனித அந்தோனியார் திருத்தலம் நோக்கி.

சீனா வீதி சந்தியிலிருந்து ரெக்லமேஷன் வீதி வழியாக ஜிந்துப்பிட்டி நோக்கி.

செட்டித்தெருவிலிருந்து மற்றும் ஆட்டுப்பட்டித் தெரு வீதியிலிருந்து ஆண்டிவேல் வீதிக்கு.

ஆட்டுப்பட்டித் தெரு வீதி மற்றும் மகா வித்தியாலய மாவத்தை கடிகாரக் கோபுர சுற்றுவட்டத்திலிருந்து விவேகானந்த மேடு நோக்கி.

மகா வித்தியாலய மாவத்தையிலிருந்து புதிய செட்டித்தெருவிற்கும் சங்கமித்த மாவத்தைக்கும்.

ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தையிலிருந்து கிரீன் லேன், ஜம்பட்டா வீதி, கல்பொத்த வீதி, போதிராஜா மாவத்தை, சிவானந்தா வீதி மற்றும் ஜம்பட்டா மாவத்தை நோக்கி.

சங்கமித்த மாவத்தையிலிருந்து ஜம்பட்டா வீதிக்கு.

ஓட்டுநர்களுக்கான மாற்று வழிகள்

மோதரை பகுதியிலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியில் இடதுபுறம் திரும்பி, ஜோர்ஜ் ஆர்.டி. சில்வா மாவத்தை வழியாக ஆமர் பாபர் சந்தியை நோக்கிச் செல்லலாம்.

புறக்கோட்டையிலிருந்து மோதரை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் சீனா வீதி, பிரதான வீதி, கேஸ்பஹ சந்தி, ஆட்டுபட்டித் தெரு வீதி (ஸ்ரீ ரத்னஜோதி சரவணமுத்து மாவத்தை), மகா வித்தியாலய மாவத்தை, கடிகாரக் கோபுர சுற்றுவட்டம், மகா வித்தியாலய மாவத்தை மற்றும் ஆமர் பாபர் சந்தி வழியாகச் செல்லலாம்.

அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள்

திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகப் பின்வரும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜிந்துப்பிட்டி தேவாலய வாகனத் தரிப்பிடம்
கோல்ட் மார்க்கெட் வாகனத் தரிப்பிடம்
ரெக்லமேஷன் வீதி வாகனத் தரிப்பிடம்
ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை வாகனத் தரிப்பிடம்
புளூமெண்டல் வீதி வாகனத் தரிப்பிடம்
புதிய மாவத்தை (ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்த சந்தி வரையிலான பகுதி)

எனவே, குறிப்பிட்ட நாளில் இப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.