Saturday, May 30, 2026

அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்

 

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார்.

அவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அருமை நண்பர் அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அதிரடி முற்றுகை : பிரபல கசிப்பு வியாபாரி கைது

 


மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் பொசன் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட முக்கிய பிரபல கசிப்பு வியாபாரி ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்

பொசன் தினமான இன்று சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 27.5 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர் சிறுமி மரணம் : அண்ணன் கைது

 

ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.

கைப்பேசியை பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதே இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் 14 வயதுடைய அண்ணன், தனது 11 வயது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அச்சிறுமி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, அச்சமடைந்த அண்ணன், உயிரிழந்த தங்கையின் உடலை இழுத்துச் சென்று குளியலறைக்குள் வைத்துள்ளார். அங்கு வாளி ஒன்றில் நீரை நிரப்பி, தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் காட்டுவதற்காக அவரது தலையை அந்த நீர் வாளிக்குள் திணித்து விபத்து என ஜோடிக்க முயன்றுள்ளார்.

எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் ஏறாவூர் பொலிஸாரின் தீவிர முதற்கட்ட விசாரணைகளின் போது சிறுவனின் இந்தச் செயல் அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து 14 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் கணவன் உயிரிழப்பு மனைவி படுகாயம்

 

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரற்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெரியஉளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈரற்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்

 

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அட்டமஸ்தானாதிபதி பதவியில் அதிரடி மாற்றம்!

 


நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து, இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை தற்போதைய அட்டமஸ்தானாதிபதியான பல்லேகம ஹேமரதன தேரரின் பதவி தற்காலிக இடைநிறுத்தப்படுவதாக மல்வத்து மகா விகாரை இன்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அட்டமஸ்தானத்தின் பணிகளை தற்காலிகமாகக் கவனிப்பதற்காக, வடமத்திய திசையின் பிரதம சங்கநாயக்கர் ஈதலவெடுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தப்பட்ட ஜீப் வாகனத்துடன் ஒருவர் கைது

 

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் செய்யப்பட்ட ஜீப் ரக வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


நேற்று இரவு கொட்டாவ காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஜீப் ரக வாகனமானது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைக்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளதுடன், முறையான வருமான வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ் அல்லது புகைப் பரிசோதனை அறிக்கை எதுவுமின்றி செலுத்தப்பட்டு வந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த வாகனத்திற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றைப்பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலும் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

 

ஹங்குராங்கெத்த காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹெட்ட, பகுதியில் பெருந்தோட்டம் ஒன்றில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வதைக் கவனித்த தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், அவரை உடனடியாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஹங்குராங்கெத்த காவல்துறைப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

டொலருக்கு எதிராக சரிவைச் சந்திக்கும் ரூபாயின் பெறுமதி


 இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 5.4 சதவீதத்தினால் (5.4%) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைக்கால தரவுகள் தெரிவிக்கின்றன.

மே 29 ஆம் திகதி வரையிலான சந்தை நிலவரங்களின்படி இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையின் வெளிநாட்டுத் துறை சார்ந்த முக்கிய குறிகாட்டிகளில் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், உள்ளூர் நாணயத்தின் மீதான அழுத்தம் குறையவில்லை என்பதையே இந்த வீழ்ச்சி பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் காலமானார்

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் காரோட்ட வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்.

தனது 85 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.

பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தின் இறுதிச்சடங்குள் நடைபெற்றவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

"பௌத்த சாசனத்தை அழிக்க உள்நாட்டு, வெளிநாட்டுச் சூழ்ச்சிகள் அதிகரிப்பு"

 

பௌத்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படைகளைச் சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த கட்டமைப்பை சிதைத்து அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக, அண்மையில் தலைமை தேரர் தொடர்பான சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஹாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ள நிலையில், அவற்றை மீறி செயற்படுவது சாசனத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சங்க சொத்துக்கள் தொடர்பில் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம்

 

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றங்களை பதிவு செய்துள்ளது.


அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இது கடந்த விலையுடன் ஒப்பிடுகையில் 37.86 அமெரிக்க டொலர்கள் (0.84%) அதிகரிப்பாகும்.

இதேவேளை, வெள்ளியின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.29 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது. இது 0.38 அமெரிக்க டொலர்கள் (0.50%) வீழ்ச்சியாகும்.

பௌத்தர்களால் கொண்டாடப்படும் "வெசாக் பூரணை தினம்" இன்று

 


உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள், புத்தரின் மும்முறைப் பிறப்பு நிகழ்ந்த இன்றைய வெசாக் பூரணை நாளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

பௌத்தர்களின் மிக முக்கிய பண்டிகையான "வெசாக் பூரணை தினம்" இந்தியாவில் புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தி என்று அழைக்கப்படும் நாள் ஆகும்.

பௌத்த மதத்திற்கு மட்டுமன்றி இந்து மதத்திற்கும் மிக நீண்ட வரலாற்று மற்றும் ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இந்து மதத்தின் வைணவ கோட்பாடுகளின்படி, கௌதம புத்தர் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் 9 ஆவது அவதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்.

இலங்கையில் வெசாக் பூரணை தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும்.

வீடுகள், வீதிகள் மற்றும் விகாரைகளில் வெசாக் கூடுகள் (Vesak Lanterns) களிமண் விளக்குகள் மற்றும் மின்விளக்குகள் ஏற்றி ஒளியூட்டுவர்.

வீதியில் செல்வோர் மற்றும் யாத்திரிகர்களுக்கு இலவசமாக உணவு, பானங்கள், ஐஸ்கிறீம் போன்றவற்றை வழங்கும் தர்மச் செயல்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்படும்

மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்தியில் தனியார் வங்கி ஒன்றில் தீப்பரவல்

 


மட்டக்களப்பு - தாண்டவன்வெளி சந்திக்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


குறித்த தனியார் வங்கியில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது.

இந்தநிலையில், தீயணைப்பு படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியுடன், தீப்;பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தால் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தை சந்திக்கிறதா?

 

இலங்கை வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சந்தையில் விற்பனை செய்யும் எரிபொருட்களினால் பாரிய அளவிலான கட்டமைப்பு நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளின் அடிப்படையில், மானியங்கள் எதுவும் கணக்கில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே ஒவ்வொரு லிட்டர் எரிபொருளிலும் ஏற்படும் நஷ்டம் மிக அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, சாதாரண பொதுமக்களாலும் போக்குவரத்துத் துறையினாலும் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு கூட்டுத்தாபனம் பெருமளவு நஷ்டத்தைத் தாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரக எரிபொருளை சந்தைக்குக் கொண்டு வருவதற்கான இறக்குமதிச் செலவு 273.59 ரூபாயாகவும், அதற்கான வரி 136.58 ரூபாயாகவும் காணப்படுகிறது.

இதன் மூலம் அதன் உண்மையான சூத்திர விலை 432.59 ரூபாயாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அது 398 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டருக்கு 34.59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதேபோல், பெட்ரோல் 95 ரகத்தில் ஒரு லிட்டருக்கு 22.46 ரூபாய் நஷ்டம் பதிவாகியுள்ளது.

மறுபுறம், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் இந்த நஷ்டத்தின் அளவு மிக மோசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் இறக்குமதி செலவு 560.85 ரூபாயாகவும், வரி 163.27 ரூபாயாகவும் உள்ள நிலையில், அதன் சூத்திர விலை 749.70 ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும், அது சந்தையில் 382 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதால், ஒவ்வொரு லிட்டர் ஒட்டோ டீசலுக்கும் கூட்டுத்தாபனம் 367.70 ரூபாய் என்ற பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

சுப்பர் டீசலைப் பொறுத்தவரை இந்த நஷ்டம் மேலும் அதிகரித்து லிட்டருக்கு 397.07 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, எவ்வித வரிகளும் விதிக்கப்படாத மண்ணெண்ணெய், ஒரு லிட்டர்; 550.24 ரூபாய் இறக்குமதிச் செலவுடன், 580.53 ரூபாய் சூத்திர விலையைக் கொண்டிருந்த போதிலும், அது வெறும் 255 ரூபாய்க்கே நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விற்பனையிலும் 325.53 ரூபாய் நஷ்டத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ளமை மின்சக்தி அமைச்சின் தரவுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.