Friday, May 15, 2026

108 மில்லியன் பெறுமதியான கொக்கெய்னுடன் ஒருவர் கைது

 



கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.108 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளை நாட்டுக்கு கடத்த முற்பட்ட வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் இந்திய பிரஜை என்பதுடன் அவர் ஒரு புவியியலாளர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் இருந்த இரண்டு சான்றிதழ் ஆவணங்களும், மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 150 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. 



இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த விமானப் பயணியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருளும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் தாக்கி 74 வயது பெண் பலி


மின்சாரம் தாக்கியதில் 74 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.


உரகஸ்மன்ஹந்திய பகுதியில் நேற்று முன்தினம் (13) மாலை குறித்த பெண்ணானவர் அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்த நிலையில் அதனுடன் சேர்த்து மின்கம்பியொன்றும் அறுந்து விழுந்த நிலையில் கிடந்துள்ளது.


எதிர்பாராத விதமாக அவ் வழியில் வந்த பெண் மின்கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Monday, May 11, 2026

அன்னையர் திலகம்" விருது வழங்கி கௌரவம்!!



 


மட்டக்களப்பில் நூறு வயதான சிவகங்கை முதல் 30 அன்னையருக்கு "அன்னையர் திலகம்" விருது வழங்கி கௌரவம்!!


மட்டக்களப்பில் நூறு வயதைத் தாண்டிய திருமதி சிவகங்கை சண்முகராஜா உள்ளிட்ட 30 பேர் "அன்னையர் திலகம்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு நேற்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோதே இவ்வாறு கௌரவிக்கப்பட்டாரகள். 


சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர் பிறேமானந்தன், சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா, செங்கதிரோன் தே. கோபாலகிருஷ்ணன்  உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன்,  அன்னையர்களுக்கான கௌரவத்தினையும் வழங்கியிருந்தனர்.


பாராட்டப்பட்ட 30 அன்னையர்களுள் 100 வயதை தாண்டிய மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த திருமதி சிவகங்கை சண்முகராசா முடிசூட்டி கிரீடம் அணிவித்து பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 


அதேபோல் பிரபல கவிஞர் காசி ஆனந்தனின் சகோதரி 95 வயதுடைய அமிர்தகழியைச் சேர்ந்த திருமதி சிவபாக்கியம் இராசையா முதலி மற்றும் கொக்கட்டிச்சோலை முன்னாள் பிரதேச சபைத் தவிசாளரும் அதிபருமான சிவஞானம் அகிலேஸ்வரனின் தாயார் 91 வயதுடைய மட்டக்களப்பில் வாழும் திருமதி மங்களேஸ்வரி சிவஞானம், ஓய்வுநிலை அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ், சைவபுலவர் திருமதி சிவானந்த ஜோதி ஞானசூரியம் உள்ளிட்ட முப்பது பேருக்கு பொன்னாடை போர்த்தி "அன்னையர் திலகம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கதிரவன் கலைக் கழகம் " அம்மா" எனும் தலைப்பில் நடாத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டிய 53 மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 


ஓட்டமாவடியைச் சேர்ந்த திருமதி பௌசியா முகமட் கலீல் எனும் அன்னை அருமையானதொரு பாடலை மேடையில் பாடினார்.


புதுக்குடியிருப்பில் அந்த நாட்களில் வீட்டில் 200 குழந்தைகள் பெற பிரசவம் பார்த்த திருமதி சின்னப்பிள்ளையும் பாராட்டப்பட்டார். தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் பல்வேறு கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் இதன்போது இடம்பெற்றன.


180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!


 

திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுக்கு வரும் வகையில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 



இந்த தீர்மானமானது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கு பாரிய அடியாகும் என்று தேசிய தொழில் முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் புஸ்பகுமார கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த ஆண்டில் மட்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் 3 அல்லது 4 ஆவது சந்தர்ப்பமாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள உள்நாட்டு கைத்தொழில்கள் இந்த மேலதிக சுமையினால் முற்றாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்பதால் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் விளைவாகப் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது குறையும் சந்தர்ப்பத்தில் கைத்தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெருமளவானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வீதிக்கு வரும் அபாயம் உள்ளதோடு பலர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையும் உருவாகும்.

தேர்தல் மேடைகளில் உரையாற்றிய ஜனாதிபதி தற்போதைய மின்சாரக் கட்டணத்தை 3 ஒரு பங்காக குறைப்பதாக பொய் வாக்குறுதிகளை அளித்தே மக்களின் வாக்குகளை பெற்றார். நாங்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து இவ்வாறான செயற்பாட்டை எதிர்பார்க்கவில்லை. வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாக மக்கள் மீது சுமை சுமத்தப்படுகிறது. அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஹன்வெல்ல கிரிந்திவெல, பூகொட மற்றும் கடுவலை போன்ற பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இன்னும் உரிய நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. இது குறித்து திறைசேரியிடம் வினவிய போது, திறைசேரியில் பணம் இல்லை என்ற பதிலளிக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக கூறப்பட்ட போதிலும் சாதாரண மக்களுக்கு அதன் பயன்கள் சென்றடையவில்லை. எனவே 11 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக கைவிட வேண்டும் கற்றாலை மற்றம் சூரிய சக்தி போன்ற மாற்று எரிசக்தி திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தி உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Saturday, May 9, 2026

அனைத்து அன்னைகளுக்கும் இனிய அன்னைர் தின நல்வாழ்த்துக்கள்!

 





அம்மா என்றொரு வார்த்தையில்

அன்பின் உலகம் மறைந்துள்ளது…

அவள் சிரிப்பில் அமைதி உண்டு,

அவள் அரவணைப்பில் உயிர் உண்டு…


நாம் விழும் நேரம் தாங்கும் தோள்,

நாம் வெல்வோம் என்று நம்பும் உள்ளம்…

தன் கனவுகளை மறந்து வைத்து

பிள்ளை கனவுக்கு உயிர் தரும் தெய்வம்…


இருள் வந்தாலும் விளக்காய் நிற்பாள்,

இடர் வந்தாலும் துணையாக இருப்பாள்…

இந்த உலகில் ஈடு இணையற்ற

முதல் காதலும் — என் அம்மாதான்… 


அன்னைர் தின நல்வாழ்த்துக்கள்!

எல்லா அம்மாக்களுக்கும் அன்பும் நன்றியும் நிறைந்த நாள் உலகளாவிய ரீதியில் அன்னைர் தினம் அன்பு, மரியாதை மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 


பல நாடுகளில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும், அதன் உணர்வு ஒன்றே — “அம்மாவின் அன்பை போற்றுவது.



உலகின் பல நாடுகளில் இன்று அன்னைர் தினம் கொண்டாடப்படுகிறது.

உயிரை அளித்து, அன்பால் வாழ்வை அழகாக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இது.


தன் பிள்ளையின் சிரிப்பில் சந்தோஷம் காணும் அன்னையின் அன்பிற்கு ஈடு இணையில்லை.

அம்மாவின் அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை மற்றும் பாசத்தை நினைவுகூர்ந்து நன்றியை சொல்லும் இனிய தருணமே அன்னைர் தினம். 


“அம்மா என்பது ஒரு வார்த்தை அல்ல…

அது வாழ்நாள் முழுவதும் உணரப்படும் அன்பு.” 


அனைத்து அன்னைகளுக்கும் இனிய

 அன்னைர் தின நல்வாழ்த்துக்கள்!

திலித் ஜயவீரவே எதிர்காலத்தில் இந்நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தகுதியுள்ள ஒரே தலைவர் - அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

 





அரசாங்கம் செய்து தர வேண்டும். இன்று நாட்டில் மூன்று வேளை உணவு உண்ண முடியாத வறுமை நிலை காணப்படுகிறது. எனவே, இந்த நிலங்களை மீண்டும் அபிவிருத்தி செய்து, நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய திம்புலாகல ஆரண்ய சேனாதிபதிய திம்புலாகல ராகுலலங்கார தேரர் குறிப்பிடுகையில்,


தொப்பிகல திவலபத்தான பகுதியில் காலங்காலமாக விவசாயம் செய்த விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தலையீட்டினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.


இதற்கு எதிராக பெங்கமுவே நாலக தேரர் மற்றும் செனவிரத்ன உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தை நாடினர். அதன் பலனாக தற்போது விவசாயிகளுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.


இன்று பெங்கமுவே நாலக தேரர், அநுராதா யஹம்பத் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து, எதிர்வரும் பெரும் போகத்தில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்துக் கலந்துரையாடினோம்.


மகாவலி அதிகார சபையின் வதிவிட முகாமையாளருடன் இது தொடர்பாகப் பேசி, விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், விளைச்சலை விற்பனை செய்வதற்குத் தேவையான சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று வெற்றியானது இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என்றார்.

Saturday, May 2, 2026

சிசிலியா தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா-2026!!








மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா (30) திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.


கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு விசேட பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால்  ரத்னசேகர அவர்களும் கௌரவ அதிதியாக  மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  ஆகியோர் கலந்துகொண்டு சமாதான புறாவைப் பறக்க விட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.


இந் நிகழ்வின்போது கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள், உயர் தரத்தில் சித்தி அடைந்து பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகிய மாணவர்கள் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல்வேறு சாதனைகள் படைத்த மாணவர்கள் ஆகியோரிற்கு அதிதிகளால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.


மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அதில் கடந்த வருடம் தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுக் கொண்ட அட்சய லட்சுமி பரதநாட்டியம் மீள் அரங்கேற்றப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டது.


 பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு 

இதன்போது பாடசாலை நிருவாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Saturday, April 18, 2026

திருப்பெருந்துறை முத்துக்குமார வேலாயுத சுவாமி மகா கும்பாபிஷேக பெருவிழா!!!

 






கிழக்கிலங்கை - மட்டுநகர் - திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமிதேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக்ஷ- மகா கும்பாபிஷேக பெருவிழாவில் 18,19 ஆகிய தினங்களில்  எண்ணெய்காப்பு இடம்பெற்றது.


நாளை (20 ) கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Saturday, April 11, 2026

மட்/கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!










 ஆவ் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இந்துக்கல்லூரி மைதானம் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட  வித்யாலயத்தின்  அதிபர் திருமதி.ச.கி. அருள்தாஸ் தலைமையில் இடம் பெற்றது.




இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  உதவிக் கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன்சிறப்பு அதிதியாகஆரம்பப் பிரிவு, பாடசாலை மேம்பாட்டுத் திட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.பிரகாஷ்  அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்முல்லை இல்லம் 190 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,மருதம்  இல்லம் 148 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,நெய்தல்  138 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.


இப்போட்டிகளில் இடம் பெற்ற  அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.


Thursday, April 9, 2026

மட்/ஜோசப்வாஸ் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி- 2026!!!



மட்டக்களப்பு மட்ஜோசப்வாஸ் வித்தியாலய 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(09)வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்யாலயத்தின்  அதிபர் சி .என். சில்வெஸ்டர் 

 தலைமையில் இடம் பெற்றது.


தாண்டவன்வளி  தேவாலயே தலைமை அருட்தந்தை டி. ஏ ஜூலியன்  அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி (தமிழ்)  பணிப்பாளர்

 சகுந்தலா சுதர்சன்

 அவர்களும் சிறப்பு அதிதியாக

 மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர்ஏ.பிரகாஷ் (ஆரம்ப பிரிவு) அவர்களும் ,வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் 

ஆலோசகர் கே.ரவீந்திரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக

அருட்தந்தை பிரன்னர் சிலர், ஏ.ஜே.புஷ்பராஜா (பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர்) ,பழைய மாணவர் சங்க செயலாளர் ஏ. ஹரிஹரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில்ஜோசப்  இல்லம் 608 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,

அன்ரனி இல்லம் 500 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

 கிங்ஸ்லி 411 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, ஆகியன அனைவரதும் கவ






னத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.

Thursday, March 26, 2026

ஸ்ரீகாமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம் இரதோற்சவம்!!

 மட்டக்களப்பு மயிலம்பாவெளி,





ஸ்ரீகாமாக்ஷிஅம்பாள் தேவஸ்தானம் இரதோற்சவம்!!


மட்டக்களப்பு மயிலம்பாவெளி,ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானம்

 ஆலயத்தின் இரதோற்சவம் இன்று(27) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.


 இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எதிர்வரும் 28 ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 14, 2026

மட்/ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி!


(ஆர்.நிரோசன்)







மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு இந்து மகளிர் பாடசாலையான 
மட்/ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (14) திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.

இப்போட்டியானது கல்லூரியின் அதிபர்
எஸ்.டி.முரளிதரன் 
 தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வளையகல்விப் பணிப்பாளர் டி.ரவி ,  தேசிய கல்வியியல் கல்லூரியின் 
உடற்கல்வி விரிவுரையாளர்
திருமதி. டி. மோகனக்குமார்,
 உதவிக்கல்வி பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவக்குமார் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக  வளையக் கல்வி அலுவலகத்தில்  உத்யோஸ்தர்கள் 
கே. ரவீந்திரன் ,ஏ.பிரசாத் 
 ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் அணி நடை,உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், 

முதலாம் இடத்தினை 378 புள்ளிகளைப் பெற்று நளாயினி இல்லமும், இரண்டாம் இடத்தினை 334 புள்ளிகளைப் பெற்று  சாரதா இல்லமும், மூன்றாம் இடத்தினை 314 புள்ளிகளைப் பெற்று அருந்ததி இல்லமும் பெற்றுக் கொண்டது.

இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவிகள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, March 11, 2026

மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!






(ஆர். நிரோசன்)

மட்டக்களப்பு மட்/அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (11) புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் வி. முருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஜி. முகமட் பாசில் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் விளையாட்டிற்கான உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி. லவக்குமார் அவர்களும், கௌரவ அதிதியாக விஞ்ஞான பாடத்திட்டத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானசேகரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.



இல்ல விளையாட்டுப் போட்டியின் முடிவில் யமுனை இல்லம் 739 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், கங்கை இல்லம் 695 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், காவேரி இல்லம் 685 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.



இந்நிகழ்வில் நடைபெற்ற வண்ணமயமான அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி!!

 



மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று(10) செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.


இப்போட்டியானது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் இடம் பெற்றது மற்றும் புளியந்தீவு மெதடிஸ் தேவாலயே தலைமை போதகர் ஏ.சேம் சபேந்திரன் அவர்களின் இறை பிரார்த்தனையுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன.


இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பிரதி  பணிப்பாளர் என். குகதாசன்,  இலங்கை 38-வது இராணுவபடை அதிகாரி மேஜர் கே. எம். தமீம் அவர்களும் கௌரவ அதிதிகளாக. மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான

உதவி உடற்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், முன்னாள் பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் வை.கோபிநாத் , பாடசாலையின் செயலாளர் யூ.மயூரன், மட்டக்களப்பு வலயக்கல்வி விளையாட்டிற்கான ஆசிரியர்களின் ஆலோசகர் கே.ரவீந்திரன்,சாட்டர்லைட்  விளையாட்டுக் கழக தலைவர் சக்திரமணன், லண்டனின் உள்ள சாட்டர்லைட் உறுப்பினர் ஜி. ஜீவகுமார்  ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இவ் விளையாட்டு போட்டியின் முடிவில் காட்மன் இல்லம் 357 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும்,சோமநாதர் இல்லம் 349 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும்,

ஓல்ட் இல்லம் 313 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும்,

கோல்டன் இல்லம் 292 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.


இப்போட்டிகளில் இடம் பெற்ற ஆயுதங்களை ஏந்திய வண்ணமான அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்ததுடன் இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)

Thursday, March 5, 2026

150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோலாகல இல்ல விளையாட்டுப் போட்டி!!

 











 மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை கடந்த புதன்கிழமை (04) மாலை 3.00 மணியளவில் வெப்பர் மைதானத்தில்  சிறப்பாக நடத்தியது.


பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அருட்தந்தை கிளமென்ட் அன்னதாஸ் அவர்களின் ஆசீர்வாதச் செய்தியுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகம் (குழந்தை மருத்துவம்) தலைமை விரிவுரையாளர் டாக்டர் ஏஞ்சலா அருள்பிரகாசம் அந்தோணி அவர்கள் கலந்து கொண்டார்.


கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி (நிர்வாகம்) அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். மகேந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் திருமதி டி. மோகனக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பு அதிதிகளாக கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கி முகாமையாளர் திருமதி டி. பவன் மற்றும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் வைத்தியர் நிரோஜா விமலராஜன் ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


போட்டிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ரீடா இல்லம் 524 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. 434 புள்ளிகளுடன் காசில்டா இல்லம் இரண்டாம் இடத்தையும், 420 புள்ளிகளுடன் மாறி இல்லம் மூன்றாம் இடத்தையும், 302 புள்ளிகளுடன் கான்சிலியா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.


அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன. பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


(ஆர்.நிரோசன்)