Tuesday, July 14, 2026

ஏதிலிப் பெண்கள் அணியை அரவணைக்கும் ஐசிசி - ஐசிசியின் வரலாற்று முடிவு

 

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஏதிலிப் பெண்கள் கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான காலக்கெடுவை ஐசிசி நிர்ணயித்துள்ளது.
 
இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் குறித்த மகளிர் அணி சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

தலிபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் இல்லாத நிலையில், இந்த ஏதிலிப் பெண்கள் அணி வேறு ஒரு பெயரில் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்க ஐசிசி வழிவகை செய்துள்ளது.

இந்த அணியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

2030 இலக்கை நோக்கிச் செல்லும் வகையில், இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான பயிற்சி, உடற்பயிற்சி வசதிகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021இல் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பல வீராங்கனைகள் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

இந்தநிலையில் ''எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. எங்களின் திறமைக்கு உரிய வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என குறித்த வீராங்கனைகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்த தனித்துவமான பெண்கள் அணி, சர்வதேச அரங்கில் சாதனை படைக்கும் நாளை நோக்கி கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய திட்டம்!

 

Uploading: 4460544 of 21610562 bytes uploaded.

சிறு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு வயது வாரியான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

13 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் கண்காணிப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க, இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்.

இணையத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தவிர்க்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த விரிவான மற்றும் உறுதியான திட்ட வரைபடத்தை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 'ஸ்டேட் ஒஃப் தி யூனியன்' உரையின் போது வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே சமூக வலைதளங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அல்லது பரிசீலித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - எண்ணெய் விலை 4% உயர்வு!

 

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 79.22 டொலராகவும், அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 74.45 டொலராகவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள இராணுவ மோதல்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியான போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலக நாடுகளின் அன்றாட மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஏற்றுமதி மையங்கள் மீதான தாக்குதல்களும் விநியோகத்தைப் பாதித்துள்ளன.

எதிர்காலத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க, மத்திய கிழக்கு நாடுகள் மாற்று குழாய்த்திட்டங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

இதன்காரணமாக, எரிசக்தி சந்தையில் பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

Monday, July 13, 2026

ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்

 

லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரு மாணவன் மாத்திரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர், 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை காவல்துறையினரும், பிரதேச மக்களும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

லோர்ட்ஸில் வரலாற்று வெற்றி - இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல்!

 

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

457 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, போட்டியின் கடைசி நாளில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இந்திய மகளிர் அணியின் சார்பில் சினேகா ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அத்துடன் தீப்தி சர்மா இங்கிலாந்தின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

குறித்த போட்டியில் இந்திய வீராங்கனை கிராந்தி கௌட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியும், யாஸ்திகா பாட்டியா சதம் அடித்தும் லோர்ட்ஸ் மைதானத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

சிறப்பாக விளையாடிய யஸ்திகா 158 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்து லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற உலக சாதனையை நிலைநாட்டினார்.

லோர்ட்ஸில் ஆடவர் டெஸ்ட் போட்டிகள் தொடங்கி 142 ஆண்டுகள் மற்றும் 150 போட்டிகளுக்குப் பிறகு, அங்கு நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி - எச்சரிக்கை விடுத்த காவல்துறை!

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திலிருந்து வருவதாகத் தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், வீதிப் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளில் உள்ள சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் பொதுமக்களை மோசடிக்கு உள்ளாக்க முயற்சிப்பதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான எந்தவொரு அறிவித்தலையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுக்கவில்லை என்றும், இந்தச் செய்திகள் முற்றிலும் போலியானவை என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தியில் உள்ள இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட அல்லது வங்கித் தரவுகளை வழங்க வேண்டாம் என்றும், இத்தகைய மோசடிச் செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின், உடனடியாக அருகில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்

 


அனுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவைப் பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்.

1912 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டு தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில், அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் உயிர் பிழைத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது பின்னால் 12 பிள்ளைகளையும், 325 பேரப்பிள்ளைகள் வரையிலான மிகப்பெரிய குடும்ப வம்சாவளியையும் கொண்டுள்ளார்.

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர் சாம் நீல் காலமானார்

 

ஜுராசிக் பார்க் (Jurassic Park) திரைப்படத் தொடரில் மருத்துவர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரமாக அறியப்படும் மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

அவர் தனது 78 ஆவது வயதில் காலமானார்.

அவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்

 

இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது, மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களாகவே அதைப் பார்க்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியரும், இலங்கை மக்கள் தொகை சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது குறைந்து வரும் கருத்தரிப்பு விகிதம், மக்கள் தொகையின் முதுமை, இளைஞர்களின் அதிகப்படியான புலம்பெயர்வு மற்றும் மாறிவரும் குடும்ப அமைப்பு போன்ற குறிப்பிடத்தக்க மக்கள் தொகை மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாகப் பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் தலைமுறையினர் தற்போது மிக வேகமாக மாறிவரும் சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் ரீதியான நிச்சயமற்ற தன்மை, மலிவு விலையில் வீட்டு வசதி கிடைப்பதில் உள்ள சிரமங்கள், தொழில் வளர்ச்சியில் உள்ள கடும் போட்டி ஆகிய காரணங்கள், திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்குவது குறித்து அவர்களின் முடிவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இளைஞர்களுக்கு உதவும் வகையில் தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல்,
மலிவு விலையில் வீட்டு வசதி மற்றும் தரமான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்பத்திற்கு ஏற்ற அலுவலகச் சூழலை உருவாக்குதல் ஆகிய கொள்கை மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு - புதிய கண்டுபிடிப்பு!

 

நியூ கினியாவின் தாவோரா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்புப் படிமத்தின் மூலம், இராட்சத கங்காரு இனம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததுள்ளமை உறுதியாகியுள்ளது.

Protemnodon tumbuna என்ற இந்த இராட்சத கங்காரு இனம், மற்றைய கங்காருகள் போல் குதிக்காமல் நான்கு கால்களால் நடந்து வலம் வந்துள்ளன.

அவுஸ்திரேலியாவின் இராட்சத விலங்கினங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழியவில்லை என்றும், சில இனங்கள் மனிதர்களுடன் பல்லாயிரம் ஆண்டுகள் இணைந்து வாழ்ந்துள்ளன என்றும் இந்த ஆய்வின் ஊடாக உறுதியாகியுள்ளது.

கட்டார் முன்னாள் அமீர் மறைவு: இந்தியாவில் இன்று துக்க தினம் பிரகடனம்

 

கட்டார் நாட்டின் நவீன அரசை உருவாக்கியவரும், முன்னாள் அமீருமான ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவையொட்டி, இன்று (13) இந்திய அரசு, தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று (12) வெளியிட்ட அறிவிப்பில், துக்க தினமான இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரச அலுவலகங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரை "கட்டார் நாட்டை உயர்ந்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அழைத்துச் சென்ற தொலைநோக்கு பார்வையாளர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், "கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் கட்டாருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியாவின் உண்மையான நண்பராக எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துக்க தின நிகழ்வுகள் மூலம், கட்டாருடனான இந்தியாவின் நெருக்கமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளி விலை

 

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,083 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.97 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் கசிவால் களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - தீயணைப்பு வாகனம் அனுப்பி வைப்பு

 

மின் கசிவு காரணமாக களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பேங்கொக் களியாட்ட விடுதியில் தீப்பரவல்: 27 பேர் உயிரிழப்பு

 

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13 அதிகாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் சிக்கி குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், "தீப்பரவல் ஏற்பட்டபோது விடுதி முழுவதும் புகை வேகமாகப் பரவியுள்ளது.

அங்கிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது, போதிய அவசரக்கால வெளியேறும் வழிகள் இல்லாததால் கழிவறைகளுக்கு அருகில் சிக்கிக்கொண்டனர்.

இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறுபோக நெல் கொள்முதல் இன்று முதல் ஆரம்பம்

 

விவசாயிகளிடமிருந்து சிறுபோக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை இன்று (13) திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 143 கொள்முதல் நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

அம்பாறை, உகன பிரதேசத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக, விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி நாடு நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 140 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதனிடையே, நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே பெருமளவிலான நெல் இருப்பு காணப்படுவதால், இந்தத் தடவை எதிர்பார்க்கப்படும் அறுவடையில் சுமார் 2 சதவீதமான நெல்லை மட்டுமே கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.