Monday, August 3, 2026

பேராதனைப் பல்கலைக்கழக விடுதிக்குள் வெள்ள பெருக்கு: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

 

மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கேகாலையில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

 

கேகாலை - கரடுப்பன சந்தியில் இன்று (03) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் 18 பேர் காயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Saturday, August 1, 2026

கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

 

கெனியோன்  நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் தலா 6 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, லக்சபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதால், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது

 

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர்; கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!

 

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சியான வானிலை நீடித்து வருவதால், பொதுமக்களை நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்கனவே கடுமையான  நீர் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது சுமார் 40வீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளது.

எதிர்வரும் எல் நினோ காலநிலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகும் வீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மழைபெய்யும் வரை நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களில் உள்ள  நீரை வீணாக்காமல் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில்,வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து எல் நினோ நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

எல் நினோ என்பது மழை முற்றிலும் பெய்யாது என்பதைக் குறிக்காது. மாறாக மழை வீழ்ச்சி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அத்துடன், வெப்பநிலை உயர்வால் ஆவியாதல் வீதம் அதிகரிக்கும் என்பதால் நீர் முகாமைத்துவம் மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பெரும்போகப் பயிர்ச்செய்கையை எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாசன அமைப்புகள் மற்றும் விவசாய மண்டலங்கள் முழுவதும் ஒரே நேரத்தில் பயிர்ச்செய்கையைத் தொடங்குவது கணிசமான அளவு நீரைச் சேமிக்க உதவும் என்ற நோக்கத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வறட்சியான வானிலையைச் சமாளிக்கக் குடிநீர் மற்றும் மின்சார விரையத்தைக் குறைக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Friday, July 31, 2026

பிறரின் பயணப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் – சுங்கத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 


வானூர்தி பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், வானூர்தி நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.


பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

2 வயதில் நாம் செய்த தவறு... 60 வயதில் மறதி நோயை உருவாக்குமா? பரபரப்பு ஆராய்ச்சி முடிவுகள்!

 

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் முதிர்ந்த வயதில் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், 'டிமென்ஷியா' (மறதி நோய்) பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐக்கிய இராச்சியத்தில் (UK) சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சர்க்கரை நுகர்வு திடீரென அதிகரித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

செப்டம்பர் 1953-இல் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ஒருவர் தினமும் உட்கொள்ளும் சர்க்கரையின் சராசரி அளவு சுமார் 41 கிராமில் இருந்து 80 கிராமாக உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

'யூகே பயோபேங்க்' (UK Biobank) திட்டத்தில் பங்கேற்ற சுமார் 65,000 பேரின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டது.

இதில், இரண்டு வயதுக்கு முன்பாக சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ந்தவர்களுக்கு டிமென்ஷியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு இந்த நோய் கண்டறியப்படுவது சராசரியாக இரண்டரை ஆண்டுகள் தாமதமாகியுள்ளது.

வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, நீண்ட கால அடிப்படையில் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்பதை இந்த முடிவுகள் உணர்த்துவதாக ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஜியாஜென் செங் (Jiazhen Zheng) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தத் தொடர்பை முழுமையாக உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளையில், இது ஒரு அவதானிப்பு ஆய்வு (Observational study) மட்டுமே என்பதால், குறைந்த அளவில் சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக டிமென்ஷியாவைத் தடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சர்க்கரை உட்கொண்டார்கள் என்ற துல்லியமான விவரம் அறியப்படவில்லை என்றும், அவர்களின் பிறந்த காலத்தையும் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாட்டு முறையையும் மட்டுமே விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

1940 மற்றும் 1950-களில் பிறந்தவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை, இன்றைய காலகட்டக் குழந்தைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கச் சீரான உணவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களும் மிக முக்கியம் என்றும், நல்ல பழக்கங்களைத் தொடங்குவதற்கு எந்த வயதும் தாமதமில்லை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பிரோட் பீக் மலையில் பனிச்சரிவு - நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 வீரர்கள் மாயம்!


 உலகில் உயரமான மலைகளில் ஒன்றான பாகிஸ்தானின் பிரோட் பீக் (Broad Peak) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில், உலகப் புகழ்பெற்ற மலையேறு வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேறு வீரர்கள் காணாமல் போயிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


பனிச்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பீர் உற்பத்திக்கு அரிசி, சீனியா? தடுக்கக்கோரும் மனுவின் மீது நீதிமன்றின் உத்தரவு

 

பீர் உற்பத்தியில்  அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரும் ஒரு நீதிப்பேராணை மனுவின் விசாரணை அக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காகவே அக்டோபர் 2 ஆம் திகதியன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்கள் ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சட்டத்துறைத் தலைவர் மற்றும் காவல்துறை மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரிசி உற்பத்திக்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து கணிசமான மானியங்களை வழங்கி வருகிறது.

இந்தநிலையில், பீர் உற்பத்தி போன்ற வணிகத் தொழில்களுக்கு அரிசியைத் திசைதிருப்புவது தேசியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான நாட்டின் முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

அதன்படி, பீர் உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதிலிருந்து, மதுவரி ஆணையர் நாயகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களைத் தடுக்கும் உத்தரவை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

Thursday, July 30, 2026

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை – ஆபத்தில் இலட்சக்கணக்கான மக்கள்

 

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் 141.5 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


2026ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் நிர்ணயித்துள்ள மொத்த 245 பில்லியன் ரூபாய் வருவாய் இலக்கில், முதல் ஆறு மாதங்களுக்கான இலக்கு 119.3 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் ஒப்பிடுகையில் 118.6 சதவீத வருவாய் இலக்கை எட்டும் வகையில் திணைக்களம் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 117.03 பில்லியன் ரூபாய் வருவாயுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. ஹேமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மதுபான உற்பத்திக்காக 17.25 மில்லியன் லீற்றர் நிர்ப்பூரண மதுசாரம் (Absolute Alcohol) பயன்படுத்தப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அது 19.6 மில்லியன் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதுபானப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் அவ்வப்போது மதுபான விலைகளை அதிகரித்திருந்த போதிலும், பல்வேறு நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் மதுவரி வருவாயை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் முடிந்துள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.