Saturday, July 18, 2026

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ஈரான்!

 

அமெரிக்கா தனது கடப்பாடுகளை மீறியதைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தான் மேற்கொண்டிருந்த அனைத்து கடப்பாடுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் வெளியுறவு பிரதி அமைச்சர் காசெம் கரிபாபாடி இதனை அறிவித்துள்ளதாக ஈரானின் பார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ் அமெரிக்கா தனது அனைத்து கடப்பாடுகளையும் மீறி அவற்றைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக காசெம் கரிபாபாடி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மேற்கொண்டிருந்த கடப்பாடுகள் மற்றும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றைத் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நாடு தனது தற்காப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"பிரதமராக இருந்தாலும் கூட, நான் வீட்டில் நான்கு பூனைகளின் பணியாளர்" - பிரதமர் ஹரிணி அமரசூரிய

 

வீதிகளில் வாழும் விலங்குகள் மீது அன்பையும் கருணையையும் காட்ட வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுயாதீன விலங்கு நல மருத்துவர்கள் சங்கத்தினால் நேற்று (17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "வீட்டில் பூனைகளை வளர்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், நாம் அவர்களின் உரிமையாளர்கள் அல்ல, நாம் அவர்களின் பணியாளர்கள்.

எந்தவொரு உயரிய பதவியில் இருந்தாலும், வீட்டுக்குச் சென்றதும் நான் நான்கு பூனைகளின் பணியாளராகவே இருக்கிறேன்.

நமது வீடுகளில் இருக்கும் செல்லப் பிராணிகளைப் பற்றி மட்டுமன்றி, வீதிகளில் திரியும் விலங்குகள் குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டார்.

தாய்லாந்தில் ஓய்வெடுக்கும் சமந்தா!

 

நடிகை சமந்தா, அண்மையில் வெளியான தனது திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தாய்லாந்துக்கு தனிப்பட்ட சுற்றுலா சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இந்த சுற்றுலாவின் போது, உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையிலான ஒரு சொகுசு விடுதியில் அவர் தங்கியிருப்பதாகவும், அந்த விடுதியில் இரண்டு இரவுகள் தங்குவதற்கான கட்டணம் சுமார் இந்திய ரூ.3.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை இருப்பதாகவும் இந்திய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சொகுசு விடுதியில்உடற்பயிற்சி, நலவாழ்வு சிகிச்சைகள் மற்றும் இயற்கைச் சூழலில் ஓய்வெடுக்கும் வசதிகள் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை

 

இலங்கையில் இன்று (18) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தீவிரமாகும் டெங்குவின் தாக்கம்: இதுவரை 53 பேர் பலி

 

நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000-ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

 

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 237 கிராம் போதைப்பொருளுடன், வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய அங்கோலா நாட்டைச் சேர்ந்த பெண் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கதிர்காம புனித பூமியை பிளாஸ்டிக் அற்ற வலயமாக்க 5 ஆண்டுத் திட்டம் ஆரம்பம்

 

கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆரம்பித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான காதிர்காமம் ஆடிவேல் உற்சவத்திற்கு இணையாக 'பொலித்தீன் அற்ற புனித வலயங்கள் - 2030' (Polythene Free Sacred Zone - 2030) எனும் இந்த திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

வருடாந்தம் இலட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகை தருவதுடன், ஆடிவேல் உற்சவ காலப்பகுதியில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு, பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்து பக்தர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்புகளுக்கு எதிரான சோதனைகளை பலப்படுத்தவும் இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும், வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Friday, July 17, 2026

நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் அலுவலகத்தில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

 


நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் கூரை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறைத் தலைவர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்துகுமாரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தின் தரைத்தளமானது, அஞ்சல் அலுவலகம், முத்திரைத் துறை, அருங்காட்சியகம், உணவகம் மற்றும் நினைவுப் பொருட்கள் வாங்கும் இடமாக மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக மேல் தளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையிலும் சுற்றுலா வாரியத்தின் வழிகாட்டுதலுடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அஞ்சல் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இன்று குறைந்த தங்கவிலை

 

இலங்கையில் இன்று (17) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் சவக்காரங்களுக்கு புதிய கட்டுப்பாடு - நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி அறிவிப்பு

 

இலங்கையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான சவக்கார உற்பத்திகளுக்கான கட்டாய பெயரிடல் தேவைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.


இந்த புதிய ஒழுங்குவிதிகள் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியசாலையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியின் பெயர், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அல்லது ஏதேனும் இரு மொழிகளில் தடித்த எழுத்துக்களில் பிரதான பக்கத்தில் அச்சிடப்பட வேண்டும். மூன்றாவது மொழி ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தியில் உள்ள மொத்தக் கொழுப்பு உள்ளடக்கம் சதவீத அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இந்த எழுத்துக்கள் 2 மில்லிமீற்றருக்குக் குறையாத அளவில் தடித்த எழுத்துக்களில் அமைய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குவிதிகள் குழந்தை சவக்காரம், குளியல் சவக்காரம், சவர சவக்காரம் , கார்போலிக் சவக்காரம், சலவை சவக்காரம் மற்றும் மென் சவக்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்குப் பொருந்தும்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் 2027 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு

 

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நான்கு பேரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிற நீண்டகால உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ஆந்திராவில் 67 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது பாதிக்கப்பட்டவர்களில் மூவர் வீட்டுத் தனிமையிலும், இருவர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பாவில் கடும் வெப்பம்: சீன தயாரிப்பு குளிரூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடு

 

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, சீன நிறுவனமான 'மீடியா' (Midea) தயாரிக்கும் 'போர்ட்டா-ஸ்பிலிட்' (PortaSplit) வகை குளிரூட்டிகளுக்கு தற்போது பெரும் தேவை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூன் மாதத்தில் ஐரோப்பாவின் பல நகரங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டிப் பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நகரங்களில் உள்ள பல பாரம்பரிய மற்றும் பழைய கட்டடங்களின் அமைப்பால், சுவர்களைத் துளையிட்டோ அல்லது வெளிப்புறத்தில் பெரிய அளவிலான குளிரூட்டும் இயந்திரங்களைப் பொருத்தியோ பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுமானக் கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்தச் சூழலில், 'போர்ட்டா-ஸ்பிலிட்' கருவி ஜன்னல் வழியாக எளிதாகப் பொருத்தக்கூடிய வகையில் இருப்பதால், எந்தவொரு கட்டுமான மாற்றமும் இன்றி அதனைப் பயன்படுத்த முடிவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தக் குளிரூட்டிகளின் விலை சுமார் 750 யூரோக்களாக இருந்தாலும், தேவை அதிகரிப்பால் சந்தைகளில் இவை விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால், இணையவழி விற்பனைத் தளங்களில் இதன் விலை அசல் விலையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதிக்கு , அமெரிக்கா வழங்கப்போகும் 196 கோடி டொலர் பெறுமதியான ஆயுதங்கள்

 

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவிற்கு சுமார் 196 கோடி டொலர் பெறுமதியான  ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இந்தநிலையில், சவூதி அரேபியா கோரியுள்ள ஆயுதங்களில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட துல்லியமான தாக்குதல் ஆயுத அமைப்புகளும் அடங்கும்.

அவை குறைந்த சேதத்துடன் இலக்குகளைத் துல்லியமாக அழிக்கக்கூடியவை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துருகிரியவில் பேருந்து ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்து: 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

 

அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தையில் தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடுவல பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு


கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கான பின்னணி போதைவஸ்து வர்த்தகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.