ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஏதிலிப் பெண்கள் கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான காலக்கெடுவை ஐசிசி நிர்ணயித்துள்ளது.
இதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் குறித்த மகளிர் அணி சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
தலிபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் இல்லாத நிலையில், இந்த ஏதிலிப் பெண்கள் அணி வேறு ஒரு பெயரில் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்க ஐசிசி வழிவகை செய்துள்ளது.
இந்த அணியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
2030 இலக்கை நோக்கிச் செல்லும் வகையில், இந்த வீராங்கனைகளுக்குத் தேவையான பயிற்சி, உடற்பயிற்சி வசதிகள் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021இல் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் பல வீராங்கனைகள் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தநிலையில் ''எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. எங்களின் திறமைக்கு உரிய வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என குறித்த வீராங்கனைகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்த தனித்துவமான பெண்கள் அணி, சர்வதேச அரங்கில் சாதனை படைக்கும் நாளை நோக்கி கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
