Monday, June 15, 2026

மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு: சி.ஐ.டி விபரம் சமர்ப்பிப்பு


முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ராசிக் மொஹமட் ஃபைஸ் மற்றும் ஹமீத் லெப்பே மொஹட் ஆகியோரே இந்த புலனாய்வு விசாரணையில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தொடர் படுகொலைகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள அறிக்கையின்படி, வெவ்வேறு இடங்களில் டி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பல கொடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முருகன் கோவிலை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வவுணதீவு காவல்துறை அதிகார எல்லைக்குட்பட்ட கொத்தியாபொல பகுதியில் வசித்துவந்த அழகதுரை தர்மலிங்கம் என்பவர், அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்பாடு

 

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகில் உள்ள வீதியில் யூக்கலிப்டஸ் மரங்கள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அந்த வீதியூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் நிலவும் குறித்த பகுதியை ஆய்வு செய்த பின்னர், பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த போக்குவரத்து மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த பகுதியில் உள்ள மரங்களின் வேர்கள் வெளியில் தெரிவதாகவும், இதனால் மரங்கள் வீதிக்கு மேலே சரிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அபாயகரமான நிலைமை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீதியூடாகப் பயணிக்கும் வாகனச் சாரதிகள் மற்றும் பயணிகள் தங்களின் பயணங்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

 

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 34 சதம்.

விற்பனை பெறுமதி 336 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 331.42 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 341.36 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு

 

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவாகரத்து கோரி சங்கீதா தொடர்ந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

விஜய், சங்கீதா ஆகியோர் முன்னிலையாகாத நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் - சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் 19 இன் பின் அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை - பின்னிருக்கை ஆசனப் பட்டி கட்டாயம்!

 

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி அணியாமல் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் இருதரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை எச்சரித்துள்ளது.

வாகனங்களின் பின்னிருக்கைகளுக்கான ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைவதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

ஜூன் 19ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயம்

 

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 'TIN' இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய சட்ட விதிகளின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், பல்வேறு முக்கிய பொதுப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல்,மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல்,புதிய வணிகங்களைப் பதிவு செய்தல்,நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்,கடன் அட்டைகளைப் (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல் ஆகிய தேவைகளுக்கு 'TIN' இலக்கத்தைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.

இதேவேளை, கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், வரி செலுத்துவோர் அடையாள இலக்கங்கள் (TIN) இனிமேல் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்

 

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு, மரபணு மாற்றமடைந்த புதிய வகை டெங்கு வைரஸ் ஒன்றே காரணம் என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, மக்கள் மத்தியில் இந்த நோய் வேகமாகப் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போது பரவி வரும் டெங்கு வைரஸானது, கடந்த காலங்களில் நாட்டில் பரவிய வைரஸ் வகைகளுடன் ஒப்பிடுகையில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் இதற்கு முன்னர் இலங்கை மக்களிடையே பரவலாகக் காணப்படவில்லை.

இலங்கையர்களில் பெரும்பாலானோருக்கு இந்த புதிய வகை வைரஸுக்கு (Variant) எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி உடம்பில் இல்லை என்பதால், மிக அதிகளவிலான மக்கள் இந்தத் தடவை டெங்கு நோய்த்தாக்கத்திற்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்து (Vulnerable) காணப்படுகின்றது.

இதனால் நாடு முழுவதும் இந்நோய் மிக வேகமாகப் பரவக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கக்கூடும் என்பதை எதிர்பார்த்து, அதற்கு தேவையான சுகாதார ஏற்பாடுகளை அமைச்சு ஏற்கனவே மேற்கொண்டிருந்தது.

இருப்பினும், இம்முறை பரவும் வைரஸ் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து, சுகாதார அறிவுறுத்தல்களைக் கடுமையான முறையில் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு

 

காஸா பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகங்கள் (Laboratories) மற்றும் இரத்த வங்கிகளின் (Blood Banks) செயற்பாடுகள், கடுமையான மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முழுமையாக முடங்கும் பேரழிவு நிலையை எட்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு (World Blood Donor Day) காஸா சுகாதார அமைச்சு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஆய்வகங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பரிசோதனை மூலப்பொருட்களில் (Testing Materials) 87 வீதமானவை தற்சமயம் கையிருப்பில் இல்லை.

போதிய மருத்துவப் பரிசோதனை கருவிகள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் இல்லாததன் காரணமாக, நோயாளிகளுக்கான அத்தியாவசிய பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காஸா முனையில் உள்ள இரத்த வங்கிகளில் தற்சமயம் கடுமையான இரத்தப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசரமாக மேலதிக இரத்தம் தேவைப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அவசர கோரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sunday, June 14, 2026

கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!

 

கண்டி நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக Lanka Metro Bus திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கண்டி பன்முக போக்குவரத்து முனையத்தை (Multimodal Transport Terminal) மையமாகக் கொண்டு, முன்னுரிமைப் பாதைகளின் (Priority Lanes) ஊடாக 4 பிரதான வீதிகளில் இந்த பேருந்து சேவையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன மெட்ரோ பேருந்து திட்டம் டிஜிட்டல் தகவல் அமைப்புகள், பயணிகள் இலகுவாகப் பேருந்தில் ஏறுவதற்கான பிரத்தியேக மேடைகள், மற்றும் ஸ்மார்ட் கார்ட் தொழில்நுட்பம் (Smart Card Technology போன்ற சில அதிநவீன வசதிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

வரலாற்றுப் பாரம்பரியமிக்க கண்டி நகரின் தொன்மையைப் பாதுகாக்கும் அதேவேளை, பொதுமக்களுக்குத் திறனான, பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஜி-7 உச்சிமாநாடு பிரான்சில் நாளை ஆரம்பம்

 

உலகின் முன்னணி தொழிற்துறை நாடுகளைக் கொண்ட ஜி-7 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சிமாநாடு நாளை (15) பிரான்சில் ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில், பிரான்சுக்குச் சொந்தமான ஜெனீவா ஏரிக்கு (Lake Geneva) அருகில் அமைந்துள்ள விடுதி வளாகமொன்றில் இந்தமாநாடு நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் இந்த உச்சிமாநாடு நாளை மறுதினம் (16) வரை தொடரவுள்ளதாக அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தமுறை நடைபெறவுள்ள ஜி-7 அரச தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கலந்துகொள்ளவுள்ளார்.

உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகள், வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டின் போது உலகத் தலைவர்களால் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, நாளை (15) முதல் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட தூய்மையாக்கல் வேலைத்திட்டம், ஜூன் மாதம் 20ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜூன் 18ஆம் திகதி கல்வி நிறுவனங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கும் விசேட வேலைத்திட்டமும், ஜூன் 19ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சுற்றியுள்ள வளாகங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் இறுதி நாளான ஜூன் 20ஆம் திகதியன்று, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலைத் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்திற்குப் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காலி முகத்திடலில் கின்னஸ் சாதனை: 5000 கலைஞர்களின் பரதநாட்டிய ‘சங்கமம் 2026’ பிரம்மாண்ட நிறைவு!

 

கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து 10,000 கால் சலங்கைகளின் ஒரே தாள ஒலியுடன் நிகழ்த்திய “சங்கமம் 2026” பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை நிகழ்வு இன்று (14.06.2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்தியாவில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவரின் வழிகாட்டலின் கீழ் இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி(Global Academy) மற்றும் இலங்கைக்கான லியா ஹோலி டேஸ்(Leah Holly Days)ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

5000 நாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு ஆடிய இந்த நாட்டியாஞ்சலி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்தினால் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், “இலங்கை மண்ணில் தமிழ் கலையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய இந்த தருணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் கிடைத்த பெருமையாகும்” எனத் தெரிவித்து கலைஞர்களைப் பாராட்டினார்.

தமிழ் கலாசார பெருமிதத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் காலி முகத்திடலில் திரண்டிருந்தனர்.

அத்துடன், இவ்வாறான பிரம்மாண்ட கலாசார நிகழ்வை இலங்கையில் நடத்துவதற்கு வழிவகுத்த பிரதி அமைச்சருக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தொழில் விவகார பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட பல முக்கிய விசேட அதிதிகளும் கலந்துகொண்டனர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பு

 

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பெறுபேறுகள் ஒழுங்கமைக்கப்பட்டு இறுதி கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்தவார நிறைவுக்குள் பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான பாடத்திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், சிரேஷ்ட கல்வி அதிகாரிகளுக்கு,கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதங்கள் காணப்படின், முறையான முன் திட்டமிடல் மூலம் அல்லது தேவைப்படின் மேலதிக நேரத்தை ஒதுக்கியாவது பாடத்திட்டங்களை முழுமையாக கற்பித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கல்வி நாட்காட்டியின்படி ஏற்கனவே திட்டமிடப்பட்ட திகதிகளிலேயே 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் பரீட்சைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், பாடசாலைகள் உரிய பாடத்திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய வேண்டும் என செயலாளர் நாலக கலுவெவ தனது அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் பாடசாலைக்கு வராமைக்கு கல்வி அமைச்சே பொறுப்பு - ஜோசப் ஸ்டாலின்

 

பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு கல்வி அமைச்சே பெரும் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தேவைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மூலம் வசூலிக்கப்படும் பணம் பெற்றோருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதுடன், இது மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது குறைவதற்குக் காரணியாக அமைந்துள்ளது என்று ங்கில நாளிதழொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.


பல பெற்றோரால் பாடசாலைகள் கோரும் செலவுகளைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்றும், அதேநேரம் தனியார் மேலதிக வகுப்புக்களின் விரைவான பரவல் மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டது. மாணவர்கள் ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்பதை கண்டறிந்து, அந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண பாடசாலைகளும் கல்வி அமைச்சும் இணைந்து செயற்பட வேண்டும்," என அவர் கூறினார்.

கல்வி நிர்வாகத்தில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளும் தோல்விகளுமே நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

Saturday, June 13, 2026

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ: இணையத்தில் தீயாய் பரவும் காணொளி !

 

சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, "AI ரோபோக்களால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று பயந்தோம், ஆனால் அவை பிச்சை எடுக்கும் வேலையையும் விட்டுவைக்கவில்லை" என்று இணையவாசிகள் பலரும் நகைச்சுவையாகவும் கவலையுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.