பிரித்தானிய உயிரியல் பூங்காவில் 3 வயது சிறுவன் முதலை கூண்டுக்குள் வீழ்ந்து படுகாயமடைந்த சம்பவத்தை அடுத்து, கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் அமைந்துள்ள 'ஜொன்சன்ஸ் ஒஃப் ஓல்ட் ஹர்ஸ்ட்' (Johnsons of Old Hurst) உயிரியல் பூங்காவில், பிற்பகல் 1:24 மணியளவில் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3 வயது சிறுவன் ஒருவன் முதலைகள் இருக்கும் கூண்டுக்குள் விழுந்துள்ளதாக காவல்துறைக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், முதலை கூண்டிற்குள் இருந்த சிறுவனை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
படுகாயமடைந்த அந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக நோர்போக் (Norfolk) பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தீவிர குற்றவியல் வழக்காகப் பதிவு செய்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பூங்காவின் குறிப்பிட்ட பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment