பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்புக் கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டி நூல்களின்படி, உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாகக் கற்பிப்பதற்கு 300 பாடசாலை நாட்கள் அவசியமாகும்.
எனினும், 2026 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 2026 ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு அல்லது மூன்றாவது முறையாகப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் முந்தைய பரீட்சை முடிவுகள் வெளியானதில் இருந்து வரவிருக்கும் பரீட்சை திகதி வரை 4 மாதங்களும் 10 நாட்களும் இடைவெளி கிடைத்துள்ளது.
இதற்கமைய, பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சைக்குத் தயாராவதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், திட்டமிடப்பட்டுள்ள பரீட்சை கால அட்டவணையை மாற்றியமைக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment