Monday, June 29, 2026

ஷேக் ஹசீனா அதிரடி பிரகடனம்!

 

பங்காளதேஷில் கடந்த 2024 ஆம் ஆண்டு மாணவர் போராட்டங்களின் விளைவாக ஆட்சியை இழந்து, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான முன்னாள் பிரதமர் மற்றும் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, “நான் இந்த ஆண்டே எனது தாய்நாட்டிற்குத் திரும்புவேன்” என்று அதிரடியாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பிரத்தியேக நேர்காணலில் அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்காளதேஷுக்கு திரும்புவது என்பது தனது தனிப்பட்ட அரசியல் ஆசைக்கானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, அது பங்காளதேஷ் மக்களின் அரசியல் உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்தல் மற்றும் விடுதலைப் போரின் உன்னத நோக்கம் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்றார்.

“நான் அதிகாரத்திற்காக அரசியல் செய்பவள் அல்ல. பங்காளதேஷ் மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் தந்தை பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'சோனார் பங்களா' என்ற கனவை நனவாக்குவதற்காகவுமே நான் அரசியல் செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பங்காளதேஷில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையானது முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் அரசியல் பழிவாங்கல்களைக் கொண்டது என அவர் சாடியுள்ளார்.

அவாமி லீக் கட்சியைத் தலைவர்கள் இல்லாத ஒரு அமைப்பாக மாற்றுவதற்காக, நீதித்துறை இங்கு அரசியல் பழிவாங்கலுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டன.

அவை அப்போதும் தோற்றன, இப்போதும் தோற்கும்.  நான் மரணத்திற்கு அஞ்சமாட்டேன் என்று அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தனது வருகைக்குப் பின்னர் கட்சியின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்துப் பேசிய அவர், அவாமி லீக் என்பது வெறும் காகிதத்திலான அமைப்பு அல்ல என்று கூறினார். அது வங்காள மண்ணிலும், மக்களின் வரலாற்றிலும், அடையாளத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு அரசியல் சக்தி என அவர் வர்ணித்தார்.

தனது 77 ஆண்டுகாலப் பயணத்தில், அவாமி லீக் கட்சி பலமுறை தாக்கப்பட்டது, பலமுறை இரத்தம் சிந்தியது மற்றும் பலமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் மக்களின் பலத்தோடு அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பங்காளதேஷில் தாரிக் ரஹ்மான் தலைமையில் அமைந்துள்ள பிஎன்பி அரசாங்கத்திற்கு ஷேக் ஹசீனா முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

நாட்டில் முறையான ஜனநாயகச் சூழலையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டவிரோதத் தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

சோடிக்கப்பட்ட போலி வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

நாட்டில் அமைதியான முறையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளையே அவர் முன்வைத்துள்ளார்.

0 comments:

Post a Comment