அதிகரித்து வரும் செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் தொழில்துறை சார்ந்த பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு, வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்துமாறு தனியார் பேருந்து சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஜூன் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் அடுத்த ஐந்து நாட்களுக்குள் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த வருடாந்த கட்டண திருத்தத்தை ஜூலை 5ஆம் திகதி அமுல்படுத்த சங்கங்கள் உத்தேசித்திருந்த போதிலும், ஏனைய உறுப்புச் சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, வழக்கமான நடைமுறையின்படி ஜூலை 1ஆம் திகதியே இதனை அமுல்படுத்துமாறு கோருவதற்குப் பின்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் கூறுகையில்,
"எமது அனைத்து இணைந்த சங்கங்களுடனும் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடி அவர்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே, வழக்கமான நடைமுறையின்படி ஜூலை 1 முதல் வருடாந்த பேரந்து கட்டணத்தை திருத்தியமைக்குமாறு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தோம்.
சங்கங்கள் ஏற்கனவே தங்களின் செலவு கணக்கீடுகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளன. ஜூலை மாத பேருந்து கட்டண திருத்தம் 15 சதவீதத்தை விட அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தமானது பொதுவாக எரிபொருள் விலைகள் மற்றும் பிற செயற்பாட்டுச் செலவுகளைக் கணக்கில் கொள்ளும் ஒரு சூத்திரத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment