Wednesday, June 10, 2026

உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை: முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது

 

உடற்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் அளுத்கம நகரில் நடாத்தப்பட்டு வந்த இரண்டு பாலியல் தொழில் விடுதிகளை களுத்துறை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.


இம்முற்றுகையின் போது அதன் முகாமையாளர் மற்றும் 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அளுத்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட அளுத்கம நகரப் பகுதியில் நேற்று (9) இரவு இந்த இரண்டு முற்றுகைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதியை நிர்வகித்த குற்றச்சாட்டில் 57 வயதுடைய அளுத்கம பகுதியைச் சேர்ந்த விடுதியின் முகாமையாளரும், அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் 23 முதல் 43 வயதிற்கு இடைப்பட்ட 12 பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்கள் தல்கஸ்வல, மத்தக, எல்பிட்டிய, கிரியெல்ல, நவந்துடுவ, உடகரவிட்ட, வாத்துவ, மொரட்டுவ, பதுளை, மாஸ்பொத, நுவரெலியா மற்றும் பிபில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட முகாமையாளர் மற்றும் பெண்கள் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அளுத்கம காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment