Saturday, June 6, 2026

நெற் பயிர்ச் செய்கைக்கான உர மானியம் 5000 ரூபாவினால் அதிகரிப்பு

 

சிறுபோகத்தில் நெல் விவசாயத்துக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய உரக் கையிருப்பு மற்றும் உர விநியோக செயல்முறை குறித்து தெளிவுபடுத்துவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க, ஒரு மூடை யூரியா உரத்தை அதிகபட்சமாக 10,200 ரூபாய் என்ற விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"அரசாங்கத்தினால் இந்த பருவம் முதல் உர மானியமாக வழங்கப்படும் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஹெக்டேயர் ஒன்றுக்கு 25,000 ரூபாவாக காணப்பட்ட உர மானியம், இந்த பருவம் முதல் நெல் விவசாயத்துக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு 30,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுமார் 48,000 மெட்ரிக் டன் அளவு உரம், நாட்டின் அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இந்த அளவு போதுமானதாக இல்லை. இதற்கமைய, அரசாங்கம் மேலும் 15,000 மெட்ரிக் தொன் உரத்தைத் தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment