இலங்கையின் விவசாயத் துறையில் தேனீக்கள் உள்ளிட்ட மகரந்தச்சேர்க்கை உயிரினங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவது உணவு உற்பத்திக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் பயிர்ச்செய்கைக்கான செலவு அதிகரிப்பதுடன், விவசாயிகளின் இலாபமும் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தேனீக்களுக்குப் பாதுகாப்பான விவசாய முறைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் தரவுகளின்படி, தேனீக்களின் மகரந்தச்சேர்க்கை மூலம் பயிர் அறுவடையை 20% தொடக்கம் 70% வரை அதிகரிக்க முடியும் என்றபோதிலும், நவீன விவசாய முறைகள், வாழ்விட அழிப்பு மற்றும் அதிகளவிலான பூச்சிக்கொல்லிப் பயன்பாடு காரணமாக இந்த தேனீக்கள் கடுமையான அழிவை எதிர்நோக்கியுள்ளன.
பெரிய அளவிலான ஒற்றைப்பயிர்ச் செய்கை விரிவாக்கம் மற்றும் இயற்கைத் தாவரங்களின் அழிப்பு காரணமாகத் தேனீக்களின் இயற்கையான வாழ்விடங்கள் சுருங்கி வருவதுடன், ஒரே மாதிரியான விவசாய நிலப்பரப்புகள் தேனீக்களின் உயிர்வாழ்வுக்குத் தேவையான பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக விலைச்சலை பெறும் நோக்கில், மகரந்தச்சேர்க்கை உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல், விவசாயிகள் வீரியம் மிக்க நச்சு இரசாயனப் பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்துவதாக விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் மற்றும் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.
ஆய்வுகளின்படி, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தாக்கத்தால் தேனீக்களின் ஆயுட்காலம் குறைவதுடன், அவை மீண்டும் தங்களது கூடுகளுக்குத் திரும்பும் திறனும், வேலைக்காரத் தேனீக்களுக்கு இடையிலான தொடர்பாடலும் சீர்குலைகின்றன.
மேலும், இவை அரசியின் முட்டையிடும் திறனைத் தடை செய்வதுடன், சில சந்தர்ப்பங்களில் தேனீக்களின் இறக்கைகள் மற்றும் கால்கள் முடக்கப்பட்டு, ஒட்டுமொத்த தேனீக் கூட்டமைப்பே முற்றாக அழிந்துபோகும் நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறு தேனீக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், இலங்கை விவசாயிகள் தற்போது கடுமையான பொருளாதாரச் சுமையை எதிர்நோக்கியுள்ளனர்.
இயற்கையான மகரந்தச்சேர்க்கை குறைந்துள்ளதால், விவசாயிகள் பாகற்காய், தர்பூசணி மற்றும் கொடி தோடை வகை (Passion fruit) போன்ற பயிர்களுக்குத் தினசரி தங்களது கைகளினாலேயே மகரந்தச்சேர்க்கையை (Manual pollination) செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு, கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்வதற்காக மட்டும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் ஒரு தொழிலாளி தேவைப்படுவதால், இது விவசாயிகளுக்குக் கூடுதல் உற்பத்திச் செலவை ஏற்படுத்தி, அவர்களின் லாபத்தைக் குறைப்பதாக பி. சிசிர குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வாக, தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கும் 'நல்ல விவசாய நடைமுறைகள்' போன்ற சூழலுக்கு உகந்த விவசாய முறைகளை விவசாயத் திணைக்களம் ஊக்குவித்து வருகிறது.
அத்துடன், பயிர்கள் பூக்கும் காலத்தில் விவசாய நிலங்களில் 'தேனீப் பெட்டிகளை' வைக்குமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பயிர்ச்செய்கை நிலப்பரப்புகளுக்கு ஏற்ப வைக்கப்பட வேண்டிய பெட்டிகளின் எண்ணிக்கையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர்கள் பூக்கும் காலங்களில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், தேவையேற்படின் வீரியம் குறைந்த மாற்று மருந்துகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிக ரீதியான விவசாயத்திற்கு அப்பால், தேனீக்களுக்கான வாழ்விடங்களை உருவாக்குவதற்காக வீட்டுத் தோட்டங்களில் மாம்பழம், வெள்ளரி, வாழைப்பழம், கோப்பி, ரோஜா மற்றும் சூரியகாந்தி போன்ற பயிர்களை வளர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மகரந்தச்சேர்க்கையை அதிகரிப்பதற்காக பொதுவாக "கனெய் மெஸ்ஸா" என்று அழைக்கப்படும் கொடுவாள் தேனீக்களின் (Stingless bees) வளர்ப்பும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் அளவு குறைவாக இருந்தாலும், அதன் மருத்துவக் குணம் காரணமாக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
உலகளவில் விவசாயத்தின் மிக முக்கியமான மகரந்தச்சேர்க்கை காரணியாகத் தேனீக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலக காய்கறி உற்பத்தியில் 90% மகரந்தச்சேர்க்கை தேனீக்கள் மூலமே நடைபெறுகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி, உலகிற்கு 90% உணவை வழங்கும் 100 பயிர் வகைகளில், 71 பயிர் வகைகள் தேனீக்களாலேயே மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகின்றன.
உலகளாவிய விவசாயப் பயிர்களில் சுமார் 70% முதல் 75% வரையான பயிர்களுக்கும், பழ மரங்களில் 75% முதல் 80% வரையான மரங்களுக்கும் தேனீக்களே மகரந்தச்சேர்க்கையை வழங்குகின்றன. தேனீக்கள் விளைச்சலை அதிகரிப்பது மட்டுமன்றி, பழங்களின் அளவு, வடிவம், சர்க்கரை அளவு மற்றும் அமிலத்தன்மை போன்ற குணாதிசயங்களை மேம்படுத்தி, விளைபொருட்களின் தரத்தையும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Post a Comment