நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா இல்லையா என்பது தொடர்பான இறுதி மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிரந்தர சேவையில் இணைந்துகொள்ளும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எந்தவித உயர்வும் மேற்கொள்ளப்படாது என கடந்த மே 19 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நீர் கட்டணங்கள் மூலம் சபையின் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்ய முடியும் என்பதும் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.
நீர் கட்டண மீளாய்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், அண்மையில் மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்ட உயர்வு நீர் வழங்கல் சேவையின் செலவுகளில் சிறியளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். எனினும், அந்த தாக்கம் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜனவரி முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவுகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
“முதல் ஆறு மாதங்களுக்கு நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம். அடுத்த மீளாய்வு ஜூன் 30 ஆம் திகதி நடைபெறும். அந்த நேரத்தில் செலவுகள் மற்றும் வருவாய் நிலைமைகள் ஆராயப்படும். மின்சாரக் கட்டண உயர்வு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்” என அமைச்சர் சுசில் ரணசிங்க கூறினார்.
இதன்படி, நீர் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்த இறுதி அறிவிப்பு ஜூன் 30 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment