இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் முதிர்ந்த வயதில் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், 'டிமென்ஷியா' (மறதி நோய்) பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐக்கிய இராச்சியத்தில் (UK) சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சர்க்கரை நுகர்வு திடீரென அதிகரித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் 1953-இல் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ஒருவர் தினமும் உட்கொள்ளும் சர்க்கரையின் சராசரி அளவு சுமார் 41 கிராமில் இருந்து 80 கிராமாக உயர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'யூகே பயோபேங்க்' (UK Biobank) திட்டத்தில் பங்கேற்ற சுமார் 65,000 பேரின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டது.
இதில், இரண்டு வயதுக்கு முன்பாக சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ந்தவர்களுக்கு டிமென்ஷியா நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு இந்த நோய் கண்டறியப்படுவது சராசரியாக இரண்டரை ஆண்டுகள் தாமதமாகியுள்ளது.
வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது, நீண்ட கால அடிப்படையில் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் என்பதை இந்த முடிவுகள் உணர்த்துவதாக ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஜியாஜென் செங் (Jiazhen Zheng) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தொடர்பை முழுமையாக உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளையில், இது ஒரு அவதானிப்பு ஆய்வு (Observational study) மட்டுமே என்பதால், குறைந்த அளவில் சர்க்கரை சாப்பிடுவது நேரடியாக டிமென்ஷியாவைத் தடுக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சர்க்கரை உட்கொண்டார்கள் என்ற துல்லியமான விவரம் அறியப்படவில்லை என்றும், அவர்களின் பிறந்த காலத்தையும் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாட்டு முறையையும் மட்டுமே விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
1940 மற்றும் 1950-களில் பிறந்தவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை, இன்றைய காலகட்டக் குழந்தைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கச் சீரான உணவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களும் மிக முக்கியம் என்றும், நல்ல பழக்கங்களைத் தொடங்குவதற்கு எந்த வயதும் தாமதமில்லை என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
0 comments:
Post a Comment