Tuesday, July 14, 2026

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - எண்ணெய் விலை 4% உயர்வு!

 

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று 4 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 79.22 டொலராகவும், அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 74.45 டொலராகவும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள இராணுவ மோதல்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியான போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உலக நாடுகளின் அன்றாட மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.

இதற்கிடையில், உக்ரைன் மீதான போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஏற்றுமதி மையங்கள் மீதான தாக்குதல்களும் விநியோகத்தைப் பாதித்துள்ளன.

எதிர்காலத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்க்க, மத்திய கிழக்கு நாடுகள் மாற்று குழாய்த்திட்டங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

இதன்காரணமாக, எரிசக்தி சந்தையில் பெரும் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

0 comments:

Post a Comment