Wednesday, July 15, 2026

தம்புள்ளையில் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு; சந்தேக நபர் கைது

 

தம்புள்ளை விஹாரை சந்திப்புப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கோயில் முற்றத்தில், வாடகை வியாபார தளங்களில் வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் தாக்குதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீண்டகால பகை காரணமாக ஏற்பட்ட இந்த மோதலில், தற்காலிகமாக வசித்து வந்த 53 வயதுடைய சுனில ரத்நாயக்க என்பவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மனைவி தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள வியாபார தளத்தை சேர்ந்த நபர் இந்தத் தம்பதியினரைத் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தம்புள்ளை தலைமையக காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கிருந்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment