Monday, July 13, 2026

இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்

 

இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது, மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களாகவே அதைப் பார்க்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியரும், இலங்கை மக்கள் தொகை சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது குறைந்து வரும் கருத்தரிப்பு விகிதம், மக்கள் தொகையின் முதுமை, இளைஞர்களின் அதிகப்படியான புலம்பெயர்வு மற்றும் மாறிவரும் குடும்ப அமைப்பு போன்ற குறிப்பிடத்தக்க மக்கள் தொகை மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாகப் பேராசிரியர் மனோரி களுதந்திரி வீரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இளம் தலைமுறையினர் தற்போது மிக வேகமாக மாறிவரும் சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் ரீதியான நிச்சயமற்ற தன்மை, மலிவு விலையில் வீட்டு வசதி கிடைப்பதில் உள்ள சிரமங்கள், தொழில் வளர்ச்சியில் உள்ள கடும் போட்டி ஆகிய காரணங்கள், திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்குவது குறித்து அவர்களின் முடிவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே, இளைஞர்களுக்கு உதவும் வகையில் தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உறுதி செய்தல்,
மலிவு விலையில் வீட்டு வசதி மற்றும் தரமான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குடும்பத்திற்கு ஏற்ற அலுவலகச் சூழலை உருவாக்குதல் ஆகிய கொள்கை மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment