‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்கள் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள ஜப்பானிய தூதரகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கையெழுத்திடப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை உதவிகளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வழங்கவுள்ளது.
ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமதா (Akio Isomata) மற்றும் FAO அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் வருமாறு :
*கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்நிலைகளில் 200 மீன் கூடுகள் (Fish Cages) அமைக்கப்படவுள்ளன.
* மீன் வளர்ப்பிற்குத் தேவையான மிதக்கும் வலை அமைப்புகள் வழங்கப்படவுள்ளன.
* கிழக்கு மாகாணத்தின் இங்கிநியாகல மீன் இனப்பெருக்க மையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹார்மோன்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
* கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு நவீன மீன் வளர்ப்பு முறைகள் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
* முதலாவது மீன் வளர்ப்புச் சுற்றுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் இலவசமாக வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம், சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், நிலையான மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுவதாக கடற்றொழில் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment