கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிறுவனம் 99 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு, நாளை (01) மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
நாளைய தினம் காலை 10:00 மணிக்கு நரம்பியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தத் திறப்பு விழா நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், இதில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனியும் கலந்துகொள்ளவுள்ளார்.
மூளை, தண்டுவடம், நரம்பு மண்டலம் மற்றும் தசைத் தொகுதி தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கான விசேட நரம்பியல் சிகிச்சைச் சேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நவீனமயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உட்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் இலங்கையின் நரம்பியல் சிகிச்சைச் சேவைகளின் தரம் மற்றும் செயல்திறன் கணிசமாக அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 62 மற்றும் 63ஆம் இலக்க விடுதிகளை உள்ளடக்கிய, நரம்பியல் பிரிவின் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட விடுதிகள் வளாகமும் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்த வசதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதிகளைக் கொண்டுள்ளதுடன், ஒவ்வொன்றும் 22 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளன.
இந்தத் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, இலங்கையின் நரம்பியல் துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், நரம்பியல் நிறுவனத்தின் நிறுவனர் 'தேஷமான்ய வித்யா ஜோதி' கலாநிதி ஜே.பி. பீரிஸின் (Dr. J.B. Peiris) உருவப்படமும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment