Sunday, May 31, 2026

பருத்தித்துறையில் மாயமான 4 கடற்றொழிலாளர்கள்: வான்படை உதவியுடன் 2ஆம் நாளாகவும் தீவிர தேடுதலை முன்னெடுக்கும் கடற்படை!

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயுள்ள 4 கடற்றொழிலாளர்களைத் தேடும் பணிகள், தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் புத்திக்க சம்பத் சூரியன் செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி இரண்டு படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன கடற்றொழிலாளர்களைக் கண்டறியும் நோக்கில், இலங்கை கடற்படையினரின் விசேட ரோந்துப் படகுகள் கடலில் தேடுதல்களை நடத்தி வரும் அதேவேளை, இலங்கை வான்படையின் உதவியும் இதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும், காணாமல் போன கடற்றொழிலாளர்கள் அல்லது அவர்களது படகுகள் குறித்த எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கடற்படை ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலவும் மோசமான வானிலை மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் எல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.அகிலன் கருத்துத் தெரிவிக்கையில்;

"விசேட அனுமதியைப் பெற்று, இந்திய கடல் எல்லைப் பகுதி வரை சென்று தீவிரமான தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இதுவரை சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை" என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

0 comments:

Post a Comment