நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி சேவையில் ஈடுபடும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாயாக அதிகரிக்கும் முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனையை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த எரிபொருள் விலை திருத்தத்தில் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 12 ரூபாயாலும், இம்முறை 24 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அண்மைய இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் 36 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோதும் பொதுமக்களுக்கு சுமை ஏற்படுத்த விரும்பாத காரணத்தால் கட்டண அதிகரிப்பை கோரவில்லை என்றும், ஆனால் தற்போதைய பாரிய விலை அதிகரிப்பிற்குக்கு பின்னர் பழைய கட்டணத்தின் கீழ் சேவையை தொடர்வது சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் செலவுகளுடன் சேர்த்து, முச்சக்கர வண்டிகளுக்கு தேவையான கிரீஸ், இன்ஜின் ஆயில் உள்ளிட்ட வழுவூட்டிகள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், முச்சக்கர வண்டித் தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும், பல சாரதிகள் தொழிலில் இருந்து விலகும் அபாயம் காணப்படுவதாகவும் ரோஹண பெரேரா எச்சரித்துள்ளார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் சிறு தொழில்முனைவோர்களின் சவால்களை போதியளவு கவனத்தில் கொள்ளவில்லை என்றும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment