இணையவழித் தளங்களில் சிறுவர்கள் ஆபத்தான உள்ளடக்கங்களை பார்ப்பதைக் குறைப்பதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆணைக்குழு, இந்த புதிய விதிகளின் கீழ் இணையவழிச் சேவை வழங்குநர்கள் (சமூக ஊடக நிறுவனங்கள்) 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் கணக்குகளைப் பதிவு செய்வதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை உள்ளடக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன், தங்களது தளங்களில் உள்ளடக்க மேலாண்மையைக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்
உயர் ஆபத்துள்ள இணையத்தள அம்சங்களிலிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வயதுக்கேற்ற பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளை வழங்குதல்.
பயனர்கள் ஆபத்தான உள்ளடக்கங்கள் குறித்து உடனடியாகப் புகாரளிப்பதற்கும், அதற்கு நிறுவனங்கள் விரைவாகப் பதிலளிப்பதற்கும் பயனுள்ள புகாரளிக்கும் கட்டமைப்புகளை கொண்டிருத்தல்.
விளம்பரங்களை வெளியிடும் விளம்பரதாரர்களை முறையாகச் சரிபார்ப்பதுடன், செயற்கையாக மாற்றியமைக்கப்பட்ட அல்லது போலியாக உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளம் காட்டும் முத்திரைகளை இடுதல்.
இந்த புதிய பாதுகாப்பு வழிமுறைகளைத் தங்களது தளங்களில் தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்காகச் சமூக ஊடக நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் சமீபகாலமாக இணையவழிக் குற்றங்கள் மற்றும் ஆபத்தான பதிவுகள் கணிசமாக அதிகரித்து வருவதால், சமூக ஊடக நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை மலேசிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இணையவழிச் சூதாட்டம், பணமோசடிகள், சிறுவர் ஆபாசப் படங்கள், இணையவழித் துஷ்பிரயோகங்கள் மற்றும் இனம், மதம், அரச குடும்பம் ஆகியவற்றுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான பதிவுகள் போன்றவற்றை மலேசியப் பாதுகாப்புப் பிரிவினர் ஆபத்தான உள்ளடக்கங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மலேசிய அரசாங்கமும் இந்த ஆண்டுக்குள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment