முதல் 100,000 மின்சார வாகனங்களை முற்றிலும் வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கும் கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் முடிவை, கென்யாவிற்கான முன்னாள் தூதுவர் கனநாதன் பாராட்டியுள்ளார்.
விண்ணை முட்டும் எரிபொருள் விலைகளால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு உயர்வால் தவிக்கும் சாதாரண குடிமக்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வகையில் இந்த மக்கள் நலன் சார்ந்த கொள்கை அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்கள் நவீன வாகனங்களை வாங்குவது தடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதித் தடைகளை நீக்கியதன் மூலம் கென்யா மலிவான போக்குவரத்திற்கான வழியைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்கான குறைந்த இயக்கச் செலவுகள், இறுதியில் மலிவான போக்குவரத்திற்கும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் வணிகச் செலவுகள் குறைவதற்கும் வழிவகுக்கும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.
காபன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்பதால் இம்முன்னெடுப்பைச் சுற்றுச்சூழல் குழுக்களும் வரவேற்றுள்ளன.
இதுபோன்ற தொலைநோக்குக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இலங்கை பெரிதும் பயனடையலாம் என வலியுறுத்திய தூதுவர் கனநாதன், "இது இலங்கை கவனமாக ஆய்வு செய்ய வேண்டிய ஒரு முன்மாதிரி ஆகும்.
மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகைகளையும் வரிச் சலுகைகளையும் அறிமுகப்படுத்துவது, நமது குடிமக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது மட்டுமின்றி, எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும் உதவும்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment