Wednesday, May 27, 2026

ஆசிரியர்கள், மாணவர்களை காப்பாற்ற அதீத முயற்சி மேற்கொண்ட காவல்துறை

 

கடந்த திங்கட்கிழமையன்று கிரிந்த கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது பலத்த அலைகளினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை காப்பாற்ற காவல்துறையின் மூன்று அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி பேசுபொருளாகியுள்ளது.

இலங்கை காவல்துறையின் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளே, இந்த விசேட மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படல்கும்பர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இணைப்பாடவிதானத் திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக கிரிந்த பகுதிக்குச் சென்றிருந்த குழுவினரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

காவல்துறையின் தகவல்களின்படி, முதலில் 56 வயதுடைய ஆசிரியர் ஒருவர் பலத்த அலைகளினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைக்காப்பாற்ற முயன்ற பல மாணவர்களும், அருகில் நீராடிக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவரும் பலத்த நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.

அந்தச் சமயத்தில் கடற்கரையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று உயிர்காப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு, மிகக் கடுமையான கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் மீட்புப் பணியை ஆரம்பித்துள்ளனர்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த உன்னதமான மீட்பு நடவடிக்கையின் மூலம், அலைகளில் சிக்கியிருந்த அனைவரையும் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வர அதிகாரிகள் சிறப்பாக செயற்பட்டுள்ளனர்.

அதிகாரிகளினால் மீட்கப்பட்டு கிரிந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி 56 வயதுடைய ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கடுமையான காயங்களுக்கு உள்ளான 18 வயதுடைய மாணவி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment