Wednesday, May 27, 2026

சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டில் மாற்றம்

 

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்வதற்குப் பதிலாக, வயதுக் குழுக்களின் அடிப்படையில் அதனை ஒழுங்குபடுத்தும் முறைமை குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகரவினால் முன்வைக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை குறித்த முன்மொழிவு தொடர்பில், நேற்றைய தினம் (26) ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் தொழில்நுட்பத்தை சிறுவர்களின் வாழ்க்கையிலிருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இதற்காக வயது அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஒன்றைக் கொண்டுவர அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்படி, மிகச் சிறிய வயதுடைய குழந்தைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், நடுத்தர வயதுடைய குழந்தைகளுக்குக் கல்வி சார்ந்த இணையத்தளங்களுக்கான அணுகல்களும், 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பொறுப்பான முறையில் பயன்படுத்தும் சுதந்திரமும் வழங்கப்படலாம் என அவர் விவரித்தார்.

இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் முழுமையான தடைக்கு பதிலாகக் கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment