தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் கிராமிய வாழ்க்கை முறையையும், மண்ணின் மணத்தையும், மக்களின் உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்து புதிய பாதையை உருவாக்கிய பெருமை பாரதிராஜாவையே சாரும். 1977 ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதன் பின்னர் 'கிழக்கே போகும் ரயில்', 'புதிய வார்ப்புகள்', 'அலைகள் ஓய்வதில்லை', 'முதல் மரியாதை' உள்ளிட்ட பல காலத்தால் அழியாத படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கினார்.
சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, யதார்த்த வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் திரையில் உயிர்ப்பித்த இயக்குநராக அவர் போற்றப்பட்டார். தனது தனித்துவமான படைப்புகளுக்காக தேசிய விருதுகள் உட்பட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
இயக்குநராக மட்டுமன்றி, பல திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் சிறந்த நடிகராகவும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு, பாரதிராஜாவை ஆழமாகப் பாதித்திருந்ததாக நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்திருந்தன.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment