Tuesday, June 2, 2026

ரஷ்யாவில் வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை!

 

யுக்ரைனின் தொடர்ச்சியான வான்வளி தாக்குதல்களால் தங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள பின்னணியில், வானூர்தி எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்ய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

ரஷ்யா தனது ஜெட் எரிபொருளை (Jet fuel) முக்கியமாக கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளுக்கே ரயில் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றது.

"உள்நாட்டு எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கமாகும்" என்று ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா ஏற்கனவே பெட்ரோல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது.

எனினும், டீசல் ஏற்றுமதிக்கு எதிராக இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேவேளை, அதுகுறித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக Interfax செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

யுக்ரைனின் வான்வளி தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தி குறைக்கப்பட்டதால், ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 10% சரிவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதத்திலும் மேலும் 10% வீழ்ச்சியடைந்துள்ளது என்று 'ரொய்ட்டர்ஸ்' (Reuters) தரவுகள் காட்டுகின்றன.

0 comments:

Post a Comment