Tuesday, June 2, 2026

தனிமையில் வாழும் முதியவர்களுக்கு நேரும் ஆபத்து

 

நாட்டில் தனியாகவும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலும் வாழும் முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து பொதுமக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி முதியவர்களின் பிள்ளைகள் தொழில் வாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பது அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் குடியேறியுள்ளதால் முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை அதிகரித்துள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான வீடுகளை இலக்கு வைத்து, போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் நகை, பணம் மற்றும் ஏனைய சொத்துக்களைக் கொள்ளையடிக்க முற்படுகின்றனர்.

அண்மைக்கால விசாரணைகளின்படி இவ்வாறான சம்பவங்கள் வன்முறைத் தாக்குதல்களாகவும், கொலைகளாகவும் மாறியுள்ளன.

முதியவர்கள் வாழும் வீடுகளில் இரவு வேளையில் போதிய வெளிச்சத்தை உறுதிப்படுத்துமாறும், அறிமுகமில்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்குமாறும், அண்டைய வீட்டாருடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முதியவர்கள் தனியாக வசிப்பது குறித்து கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகக் காவல் குழுக்களுக்கு (Community Policing Committees) அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அவசரத் தொடர்பு எண்களை வீட்டில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதுடன், அவர்களுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய கைத்தொலைபேசிகளை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதியவர்களைப் பராமரிப்பதற்காக உள்வாங்கப்படும் வீட்டுப் பணியாளர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் பின்னணியை உன்னிப்பாகப் பரிசீலிக்குமாறும், அவர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் காவல்துறை சான்றிதழ்களை (Police Clearance Reports) பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் முன்கூட்டியே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments:

Post a Comment