அம்பலாந்தோட்டை, மல்பெத்தாவ முதலாம் ஒழுங்கை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற மோதலில், மாமனாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் அம்பலாந்தோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை காவல்துறை தெரிவித்துள்ளது.
மாமண்டல, ஜன்ஸாகம பகுதியைச் சேர்ந்த "வெலி பசிந்து" என்று அழைக்கப்படும் பசிந்து உதயங்க அபேரத்ன (26 வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது.
இந்தத் தகராறு காரணமாக, மனைவி மல்பெத்தாவ பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன், நேற்று இரவு டிப்பர் ரக பாரவூர்தி ஒன்றில் மனைவியின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் பிரதான நுழைவாயில் கதவை தனது பாரவூர்தியால் மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின், வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார்.
வீட்டிற்குள் நுழைந்த அவர், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்க முயன்றபோது, அவரிடமிருந்து தப்பிப்பதற்காக மனைவி வீட்டின் ஒரு அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ள முயன்றுள்ளார்.
எனினும், கணவன் அந்த அறைக்குள்ளும் துரத்திச் சென்று மனைவியைத் தாக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, தனது மகளைக் காப்பாற்றுவதற்காக அருகில் இருந்த தடி ஒன்றைக் கொண்டு தந்தை (மாமனார்), மருமகனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரான மாமனார் அம்பலாந்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment