Sunday, July 26, 2026

சீனாவில் மரபணு திருத்த சோதனையில் 6 வயது சிறுமி பலி; உண்மையை மறைத்த விஞ்ஞானி!

 

சீனாவில் 6 வயது சிறுமி ஒருவருக்கு நடத்தப்பட்ட அபாயகரமான 'மரபணு திருத்த' (Gene-editing) மருத்துவ சோதனையின்போது அந்த சிறுமி உயிரிழந்த சம்பவமும், அந்த விடயத்தை விஞ்ஞானி ஒருவர் மூடிமறைத்த விவகாரமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ள அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 'மேய்' (புனைப்பெயர்) என்ற 6 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நரம்பியல் விஞ்ஞானி 'ஜிலோங் கியூ' தலைமையிலான குழுவினர் மரபணு திருத்த மருத்துவ சோதனையை மேற்கொண்டனர்.

இதற்காக சிறுமியின் பெற்றோரிடமிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணமும் பெறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சிறுமியின் மூளையைச் சென்றடையும் வகையில் முதுகெலும்பு வழியாக ட்ரில்லியன் கணக்கிலான வைரஸ்கள் செலுத்தப்பட்டன. ஆனால், சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரே வாரத்துக்குள் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சோதனையின் போது சிறுமி உயிரிழந்த போதிலும், அந்த ஆபத்தான உண்மையை விஞ்ஞானி ஜிலோங் கியூ மறைத்துள்ளார்.

மேலும், விலங்குகளில், தான் நடத்திய ஆய்வுகள் குறித்த கட்டுரையை 'நேச்சர்' (Nature) என்ற உலகின் புகழ்பெற்ற விஞ்ஞான இதழில் வெளியிட்டபோது, சிறுமி இறந்தமை பற்றி எந்தவொரு தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.

எனினும், 'சயின்ஸ்' மற்றும் 'ரிட்ராக்ஷன் வோட்ச்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கூட்டுப் புலனாய்வில் இந்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி, இந்த சோதனையில் உள்ள ஆபத்துகள் குறித்துச் சிறுமியின் பெற்றோருக்குச் சரியாக விளக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்துச் கருத்து தெரிவித்துள்ள 'ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழக மருத்துவப் பீடம்', "ஆராய்ச்சி நெறிமுறைகளை மீறி நடத்தப்படும் மருத்துவ சோதனைகளை ஏற்க முடியாது என்றும் இது குறித்து விரிவான விசாரணை நடத்த விசேட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

உயிரியல் தொழில்நுட்பம் துறையில் வல்லரசாக உருவெடுக்க முயலும் சீனாவுக்கு, இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment