மதுபோதையில் வாகனம் செலுத்தி, உந்துருளியில் பயணித்த இரு யுவதிகள் மீது சிற்றூந்தை மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், ஹோமாகம வலய விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர் குறித்த விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிவரும் பிரதான காவல்துறை பரிசோதகர் ஆவார்.
இந்த விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநரும் பின்னால் பயணித்தவரும் தற்போது ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது சிற்றூந்தில் பயணித்த சந்தேகநபரான பிரதான காவல்துறை பரிசோதகர், நேற்று (25) இரவு 11.30 அளவில் மீகொடை - வடரெக்க 20ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த இரு யுவதிகள் மீது மோதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிரதான காவல்துறை பரிசோதகரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அவர் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment