நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கொடூரமான வன்முறைச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் இது அண்மைய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான சிறைக் கலவரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சிறைக்குள் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி மோதலில் ஈடுபட்ட கைதிகள் சில சிறை அதிகாரிகளின் தலைகளை குறிவைத்து பெரிய கற்களை வீசியதாக சிறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு அதிகாரிகளால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி சிறைக்குள் நடந்த மோதல் ஞாயிற்றுக்கிழமை (05) முற்பகல் 11 மணியளவில் ஆரம்பித்துள்ளது.
இதன்போது, சிறைக்குள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு குழு போதைப்பொருள் வர்த்தகம் குறித்த தகவல்களை சிறை அதிகாரிகளுக்கு வழங்கிய கைதிகளைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறைத்தரப்பு தகவல்களின்படி, இந்த மோதல் முழுவதும் 'கட்டுவெல்லகம சுரேஷ்' என்பவரால் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது, கொடூரமாகத் தாக்கப்பட்ட இரண்டு கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
உயிரிழந்த குறித்த இரண்டு கைதிகளே சிறை அதிகாரிகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிறகு அனைத்து கைதிகளும் அமைதியாகத் தங்கள் அறைகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
குறித்த நேரத்தில் கைதிகள் சிறை மருத்துவமனைக்குள் புகுந்து மனநல நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகளையும் எடுத்துச் சென்றதாகச் சிறைத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பிறகு, சிறை அதிகாரிகள் திங்கட்கிழமை காலை கைதிகளுக்கு உணவும் குளிர்பானங்களும் வழங்கினர்.
அப்போது, கட்டுவெல்லகம சுரேஷை ஆதரிக்கும் பிரிவைச் சேர்ந்த ஒருவர் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்த குழுவைச் சேர்ந்த கைதி ஒருவரின் கன்னத்தில் அடித்துத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சுமார் 100 பிற கைதிகள் அதே கைதியைச் சூழ்ந்துகொண்டு அவரைக் கொடூரமாகத் தாக்கினர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த இரண்டு சிறை அதிகாரிகள் அந்தக் கைதியை மீட்டனர்.
இதன்போது தாக்குதலை ஆரம்பித்த கைதிகள் பின்னர் சிறை அதிகாரிகள் மீது கற்களை வீசினர்.
இந்த நேரத்தில் தாக்கப்பட்ட கைதிக்கு ஆதரவளித்த குழுவினரும், தாக்குதலைத் தொடங்கிய குழுவினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருந்த தலைமைச் சிறை அதிகாரியையும், கைதிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிறை அவசரகால மீட்பு மற்றும் தந்திரோபாயப் பிரிவின் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பகுதிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் நிலைமையைச் சீரமைக்க முயன்றபோது மற்றொரு கைதிகள் குழு அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்டு கடுமையான தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன்போது சில அதிகாரிகளின் தலைகளை குறிவைத்து, பெரிய கற்கள் வீசப்பட்டதாக சிறைத்தரப்புக்கள் தெரிவித்தன.
பின்னர் அந்தக் குழுவினர் சிறையின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கியையும் துப்பாக்கிகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அறையிலிருந்து மற்றொரு துப்பாக்கியையும் கைப்பற்றியதாக காவல்துறை கூறியுள்ளது.
அவர்கள் ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கியையும் ஒரு டி-56 தாக்குதல் ரக துப்பாக்கியையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
கைதிகள் இந்த ஆயுதங்களைக் கொண்டு சில சிறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் கைதிகள் தங்களுக்குள்ளும் எதிரெதிர் பிரிவினருடனும் மோதலில் ஈடுபட்டனர்.
பின்னர்,பாதுகாப்பு அதிகாரிகள் சிறைக்குள் இருந்து அந்த இரண்டு துப்பாக்கிகளையும் மீட்டெடுத்தனர்.
சிறை கண்காணிப்பாளரின் அதிகாரப்பூர்வ அறைக்குள் இருந்த கழிப்பறை உட்பட, சிறை முழுவதும் கைதிகள் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
எனினும் சிறைக்கு ஏற்பட்ட மொத்த சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.
இதற்கிடையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 1,033 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோதலை வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கட்டுவெல்லகம சுரேஷ், பூஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment