Monday, July 20, 2026

இந்திய – இலங்கை இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம்!

 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வரி மோசடிகள் மற்றும் வரி ஏய்ப்புகளைத் தடுக்கும் நோக்கில், குறித்த வரி ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்திய நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்குமிடையே எட்டப்பட்ட இந்தத் திருத்தப்பட்ட புதிய நடைமுறை, கடந்த ஜூன் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்திய நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திருத்தங்களுக்கு அமைவான விதிகள், 2027 ஏப்ரல் 01 ஆம் திகதிக்குப் பிறகு ஈட்டப்படும் வருமானங்களுக்கு இந்தியாவில் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தின் மூலம், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'முதன்மை நோக்கம் சோதனை' எனும் வரி ஏய்ப்பு எதிர்ப்பு சட்டக் கட்டமைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், முதலீடு அல்லது வணிகப் பரிவர்த்தனை ஒன்றின் முக்கிய நோக்கம் உண்மையான வணிகச் செயல்பாடுகளை விட வரிச் சலுகைகளைப் பெறுவது மட்டுமே எனத் தெரியவந்தால், குறித்த வரிச் சலுகைகளை ரத்து செய்வதற்கு இந்திய வரி அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

வரி செலுத்துவதைத் தவிர்ப்பது அல்லது குறைந்த வரி விகிதங்களைப் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தந்திரமான வணிக கட்டமைப்புகளைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

உண்மையான பொருளாதார மற்றும் வணிகப் பின்னணியைக் கொண்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இரட்டை வரிச் சலுகைகள் கிடைப்பதை இது உறுதி செய்யும் என நிதி மற்றும் சட்டத் துறை சார்ந்த சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 comments:

Post a Comment