பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆபரணங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளை, சீவலிபுர, மற்றும் பாணந்துறை நகருக்கு அருகில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆபரணங்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து, இரண்டு புள்ளிமான் கொம்புகள், யானைத் தந்தத்தை ஒத்த மாதிரி ஒன்று, பல கடற்சிப்பிகள், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட நெக்லஸ் ஒன்று, வளையல்கள் இரண்டு, யானைத் தந்தங்கள் நான்கு, தலா இரண்டு புலியின் பற்கள் மற்றும் நகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அலுபோமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பழமையான யானைத் தந்தப் பெட்டி ஒன்று, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட தாயத்துகள் நான்கு, வளையல் ஒன்று மற்றும் சிறுத்தையின் பற்கள் இரண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும், பாணந்துறை தெற்கு பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து புலியின் பல் ஒன்று மற்றும் அழிவின் அபாயத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கறுப்பு பவளத்தின் இரண்டு துண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 35, 37 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் சீவலிபுர, அலுபோமுல்ல, எவரியாவத்தை மற்றும் எனசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்திடிய வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment