Monday, July 27, 2026

தேசிய நேர்மை வாரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது

 

“நேர்மையான கலாசாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம் இன்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று (27) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த திட்டம், ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று காலை 9 மணிக்கு தேசிய நேர்மைப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளல் மற்றும் புதிய ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தல் ஆகியவற்றுடன் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஜனாதிபதி செயலகம் மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தினால் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அரச சேவையின் தரம், செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன், ஊழலற்ற ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த வாரத்துக்கான நிகழ்ச்சிகள் தினசரி அடிப்படையில் பின்வரும் தொனிப்பொருள்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன:

ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையை ஊக்குவித்தல்.

ஜூலை 28: நிதியியல், டிஜிட்டல், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப நேர்மையை ஊக்குவித்தல்.

ஜூலை 29: ஆன்மீக, ஒழுக்கவியல், கலாசார மற்றும் சமூக நேர்மையை ஊக்குவித்தல்.

ஜூலை 30: செயல்பாட்டு, உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் தொழிலாளர் நேர்மையை ஊக்குவித்தல்.

ஜூலை 31: சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமப்புற மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தல்

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவுகள் மூலம் ஊழல், துஷ்பிரயோகம் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த முறைப்பாடுகளை QR குறியீடு, மின்னஞ்சல், அஞ்சல், தொலைபேசி அல்லது இணையவழிச் செய்தித் தளங்கள் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும். பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகள் மீது நிறுவனங்களின் தலைவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிரத்தியேக டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும்.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தேசிய நேர்மை வாரம் நிறைவடைந்த போதிலும், இந்த திட்டம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment