Wednesday, July 15, 2026

அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.

வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வன்முறை தொடங்கிய விதம்

கடந்த ஜூலை 5 ஆம் திகதி, A1 விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லே கம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக உடற்பயிற்சி செய்ய நேரம் வேண்டுமெனக் கோரியுள்ளார்.

அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதையடுத்து, அவர் சிறைச்சாலை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை விடுதி திறக்கப்பட்டவுடன், அந்த கைதி A2 விடுதிக்குள் புகுந்து மற்ற கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதே இந்த விரிவான வன்முறைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் இரு கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார். மொத்தம் 36 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரிகளைத் தாக்கிய கைதிகள்

வன்முறை சிறைச்சாலை முழுவதும் பரவிய நிலையில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டடங்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் சிறைச்சாலை அதிகாரிகள் காவல்துறையின் உதவியை நாடியுள்ளனர்.

வன்முறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து 89 அவசரகால மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

மறுநாள் (6) காலை உணவளிப்பதற்காக அதிகாரிகள் உள்ளே சென்றபோது, "நாங்கள் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறோம்" என கைதிகள் மிரட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment