Wednesday, July 15, 2026

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலை சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் இறுதி கதவை உடைத்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, நிலைமையைக் கட்டுப்படுத்த குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கைதிகள் குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களில், 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment