சென்னையின் கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றில் ஏற்பட்ட தகராறு, வீதியில் கொடூர மோதலாக மாறியதில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்களின்படி, கோயம்பேட்டில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றில் சிலர் மது அருந்தியபடி நடனமாடிக் கொண்டிருந்தபோது, இரு தரப்பினருக்கிடையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, மதுபானசாலையின் பாதுகாப்பு பணியாளர்கள் (பவுன்சர்கள்) தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
எனினும், மதுபானசாலைக்கு வெளியே வந்த பின்னரும் இரு தரப்பினருக்கிடையேயான பதற்றம் தணியாமல், வீதியில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது சிற்றூர்தியை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வாகனத்தின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுமி ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment