கொங்கோ மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பரவல், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் தாண்டி தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் இணையவழி கூட்டத்தில் உரையாற்றிய அவர், எபோலா தொற்றாளர்களைக் கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், நிலைமை சீரடைவதற்கு முன்னர் மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
கொங்கோவில் நிலைமைகளை ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் மற்றும் அவசரகால சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சிக்வே இஹேக்வாசு (Chikwe Ihekweazu) ஆகியோர் அங்கு விஜயம் செய்யவுள்ளனர்.
உகண்டாவில் மேலும் இரண்டு எபோலா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கொங்கோவின் அண்டை நாடுகள் உடனடியாக அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'பண்டிபுகியோ' (Bundibugyo) எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.
கொங்கோவின் இத்தூரி (Ituri) மற்றும் வட கிவு (North Kivu) மாகாணங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் இந்த அரிய வகை வைரஸிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை இல்லாதமை இதனைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment