கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) கடந்த 23 ஆம் திகதி இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான மேலதிக தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, அதிகாலை 3 மணியளவில் இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலைத் தொடர்ந்து ஒருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பின்னர் அவரது உடலம் எஹெலியகொட பகுதியில் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் அன்று இரவு துறைமுக நகரத்திற்குள் நுழைந்த குழுக்கள் ஒன்றில் அங்கம் வகித்தவர் என்பது தெரியவந்துள்ளது.
நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டினர், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் எட்டுச் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவை எனக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிகள், ஒரு கையடக்கதொலைபேசி ஒரு வோக்கி-டோக்கி மற்றும் பல வாகனங்களைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
நாட்டிற்கு வருவதற்கு முன்னர், சம்பந்தப்பட்டவர்கள் பல வெளிநாடுகளில் செயற்பட்டு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர், கணினி தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டு, அதன் மூலம் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்ததாக நம்பப்படுவதாகக் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 comments:
Post a Comment