Tuesday, July 28, 2026

இலங்கை வம்சாவளி இளைஞருக்கு அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை!

 

அஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஓடும் தொடருந்தில் தனியாகப் பயணம் செய்த நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துககாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான சரணீஸ் சிவகுமார் என்பவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கிளீவ்லேண்ட் வழித்தட தொடருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சரணீஸ் சிவகுமார் மற்றும் அவரது நண்பரான பேட்லி மாவினே ஆகிய இருவரும் தொடருந்தில் தனியாகப் பயணித்த நபர் ஒருவருடன் ஏற்பட் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது.

இதில் இருவரும் சேர்ந்து அந்த நபரின் முகத்திலும் தலையிலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் தொடருந்தை விட்டு இறங்க முயன்றபோது, மூடப்பட்ட கதவுகள் வழியே அவரை இழுத்துத் தடுத்துள்ளனர்.

பின்னர் அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது, சரணீஸ் சிவகுமார் கண்ணாடி பொருளொன்றினால் அவரது தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து இரத்தம் சிந்திய அந்த நபர், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்துக்குப் பிறகு குயின்ஸ்லேண்ட் மாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிளீவ்லேண்ட் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கில், சரணீஸ் சிவகுமார் தான் தற்காப்புக்காகவே இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார்.

எனினும் அதனை நிராகரித்த நீதவான் டெபோரா வஸ்டா, "தற்காப்பு என்பது வேறு, ஒருவர் தலையில் தாக்குவது தற்காப்பாகாது. இது ஒரு அப்பாவி மனிதன் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்" எனக் கடுமையாக விமர்சித்தார்.

எனினும், இந்த வழக்கின் அதிகபட்ச தண்டனைக்காலம் 12 மாதங்கள் மட்டுமே என்பதால், சரணீஸுக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏற்கனவே 89 நாட்கள் விளக்கமறியலில் இருந்தமையால், மீதி தண்டனைக் காலத்தைக் கண்காணிப்பின்கீழ் பிணையில் கழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

சரணீஸ் சிவகுமார் சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குச் சென்று குடியேறியவர் என்பதும், கடந்த ஆண்டு அவருக்கு அஸ்திரேலியக் குடியுரிமை கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மெல்போர்னில் இருந்து வேலை தேடி பிரிஸ்பேன் வந்த அவர், சம்பவத்தின் போது வீடற்றவராகவும் வேலையற்றவராகவும் இருந்துள்ளார்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றுமொரு குற்றவாளியான மாவினேவுக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment